கட்டா குஸ்தி 2 விமர்சனம்: வலிமையான இரண்டாம் பாகம்தான்; ஆனால் திரைக்கதையில் மீண்டும் அதே குஸ்தியா?!
கீர்த்தியின் (ஐஸ்வர்யா லக்ஷ்மி) மல்யுத்த சாம்பியன் கனவை, தன் கனவாக நினைத்து அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார் கணவர் வீரா (விஷ்ணு விஷால்). கீர்த்தி, மல்யுத்தப் பயிற்சியில் முழு கவனத்தைச் செலுத்த, குழந்தையை வளர்ப்பது, வீட்டு வேலை என அனைத்தையும் வீரா பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில், வீரா செய்த ஒரு தவற்றினால் கீர்த்தியின் மல்யுத்த கரியரே பிரச்னைக்குள்ளாகிறது.
இதனால் அவர்களின் திருமண உறவில் விரிசல் ஏற்பட, மகள் யாருக்குச் சொந்தம் என்ற யுத்தமும் தொடங்குகிறது. கணவன் - மனைவி சிக்கல் தீர்ந்ததா, கீர்த்தியின் மல்யுத்த கனவு என்னவானது என்பதே செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இந்த கட்டா குஸ்தி 2-வின் கதை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகமும் நகர்கிறது.
சுறுசுறுப்பான உடல்மொழியால் இந்த கலகல டிராமாவுக்குத் தேவையான பங்களிப்பைக் குறைவின்றித் தந்திருக்கிறார் விஷ்ணு விஷால். தீரமாகக் குஸ்தி போடும் வீராங்கனையாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, கதாபாத்திரத்திற்குள் கடுகடு கோபம், எமோஷன் எனப் பலவற்றை அடுக்கி வெற்றி குறி காட்டியிருக்கிறார். குஸ்தி சண்டைக் காட்சிகளுக்குச் சிரத்தை எடுத்திருக்கும் இவருக்குப் பலத்த கைதட்டல்களையும் கொடுக்கலாம்.

டாடிஸ் லிட்டில் பிரின்சஸாக பேபி சாரா, மழலை மொழியால் இக்கதைக்குக் கூடுதல் நகைச்சுவை நிறம் சேர்த்திருப்பது க்யூட் மத்தாப்பு! பள்ளி ஆசிரியராக மோக்ஷாவின் நடிப்பு கவர்ச்சி எபிசோடு மட்டுமே! இவர்களைத் தாண்டி கருணாஸ், காளி வெங்கட், முனிஸ்காந்த், கருணாகரன் ஆகியோர் ஆங்காங்கே காமெடி வால்யூமை ஏற்றுகிறார்கள். ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபுவின் கேமியோ கேம் லைனிற்கு வெளியே நின்று பங்காற்றிச் செல்கிறது.
ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன், இந்தக் காமெடி டிராமாவுக்குத் தேவையான கலர்ஃபுல் டச் தந்திருக்கிறார். இரண்டாம் பாதியின் ஆட்டத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் பூசிய படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், முதல் பாதியைக் குஸ்தி வட்டத்திற்கு வெளியேவே நிற்க வைத்திருப்பது ஏனோ! சம்பவக்காரி, மகராசி என ஷான் ரோல்டனின் பாடல்களில் குறைகளில்லை. ஆனால், பின்னணி இசைக்குப் பங்களிப்பூட்டியிருக்கும் அவரின் கீகள் ஓகே மட்டுமே!

இடைப்பட்ட ஒருவரால் கணவன் மனைவி உறவுக்குள் எப்படிப் பிரச்னை ஏற்படுகிறது என்கிற ஒன்லைன் கதையை, முன்னும், பின்னும் காமெடி மற்றும் எமோஷன் கூட்டத்தை நிரப்பி குஸ்தி ஆட்டமாக அரங்கேற்றியிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. தந்தை - மகள் செல்லம் கொஞ்சல்கள், தங்கள் மகளின் படிப்பின் மேல் அக்கறையையும் கவனத்தையும் கணவன் காட்டாததால் மனைவிக்கு ஏற்படும் கடுகடுப்பு என்பதாக முதல் அரைமணி நேரமாக ஆட்டம் பேரமைதியோடு நகர்கிறது.
இதன் பிறகு மழலை மொழியில் பேபி சாரா பேசும் வசனங்கள் லேசாகத் திரைக்கதைக்குச் சுறுசுறுப்பு ஏற்றுகின்றன. ஆனால், இதற்குப் பிறகான கதையில் அபத்தமான இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி எபிசோடுகள் எனக் குறுக்கு வழியில் ஆட்டத்தை நகர்த்தியதற்கு ரெட் கார்டு கட்டாயம்! பெண்கள் மீதான வன்முறையை, அந்த நேரத்துக் கோபம் என நியாயப்படுத்திச் சென்றிருப்பது, தவறு செய்தது வீராவாக இருந்தாலும் கீர்த்தியைக் குற்றவுணர்ச்சிக்குள் சிக்க வைத்திருப்பது எனத் தவறான ரூட்டையும் இப்படம் கடைப்பிடித்திருக்கிறது.

இரண்டாம் பாதி திரைக்கதையில், கருணாஸ் - காளி வெங்கட் காம்போ நிகழ்த்தும் காமெடிகள், கருணாஸின் ஆணாதிக்கப் பார்வையை நையாண்டி செய்யும் இடங்கள் எனச் சுவாரஸ்யத்தை எட்டிப் பிடித்திருப்பது அப்படிப் போடு போட வைக்கிறது. ஆனால், சில நிமிடங்களிலேயே இந்தத் துடிப்பான ஆட்டம் சோர்வாகி, முதல் பாகத்தில் பார்த்த விஷயங்களையே மீண்டும் சேர்த்து லாஜிக்கற்ற தட்டையான முடிவையும் எட்டுகிறது படம். இதுமட்டுமன்றி, வீராவின் சொந்த ஊரிலிருந்து அடுத்த நிமிடமே நகரத்திற்கு விரைவது உள்ளிட்ட பல லாஜிக் விஷயங்களும் சிக்கலை உண்டாக்குகின்றன.
ஆங்காங்கே காமெடிகள் திரைக்கதையைக் கலகலப்புடன் நிமிரச் செய்தாலும், பல ஃபவுல் ஆட்டங்களையும் ஆடியதால் இந்தக் குஸ்தி ஆட்டத்தில் சுவாரஸ்யம் குறைவுதான்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


