எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல - கரூர் குறித்த அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு சிபிஐ வீரபாண்டியன் கண்டனம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் நேற்று முன்தினம் இணைந்தனர்.

இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ``எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது. அதனை முடிக்காமல் விட மாட்டோம். சட்டம் தனது கடமையைச் செய்யும். கரூரில் கூட்ட நெரிசலை காவல்துறையை வைத்து உருவாக்கினார்கள்.

விஜய் மீதே கை வைத்தீர்களே, மக்களைக் கொன்று குவித்தீர்களே. அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். கடைசி 15 நாட்கள் விஜய் ஏன் பல ஊர்களுக்குச் செல்லவில்லை என்றால், அதற்கு காரணம் இருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா

கரூர் கண்ணீருக்குக் காரணமாக இருந்த பாவத்துக்காகத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். கரூர் சம்பவத்திற்கு காவல்துறையும், திமுகவும்தான் முக்கியக் காரணமாக இருந்தனர்’’ என்று தெரிவித்திருந்தார்.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசின் நடவடிக்கைகள், பிற அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகள் மீது விமர்சனங்களை முன் வைப்பதற்கும், சிலவற்றைக் கண்டிப்பதற்கும் கூட அனைவருக்கும் உரிமை உண்டு; அது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

இதனைத் தவிர்த்து, அரசியல் களத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகளைப் பேசுவதும், அதுவும் பொது வெளியில் தரம் தாழ்ந்து பேசுவதும் சட்ட அத்துமீறலாகும். அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகிறது.

எனினும், தற்போது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் உள்ளவரை காவல் துறையினர் பலவந்தமாக கைது செய்யும் அளவிற்கான தீவிர நடவடிக்கையைத் தவிர்த்திருக்க வேண்டும்.

அதேபோல், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கு “கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்“ என்று அவரது கட்சிக் கூட்டத்தில் பேசியிருப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அது, அவர் வகிக்கும் பொறுப்புக்குப் பெருமை சேர்க்காது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசியல் தளத்தில் நாகரிகத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதில், பொது வாழ்வில் உள்ள அனைவரும் அக்கறை காட்டுவது அவசியம் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.