சென்னை: சிறுமி கடத்தலைத் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்; நேரில் அழைத்து பாராட்டிய DGP!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ். இவர் திருச்சியில் விவசாய வேலை முடித்துவிட்டு, தன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்புவதற்காகக் கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார்.

ரயில் நிலைய கோச் ரெஸ்டாரன்ட் எதிரே குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். ஜூலை 2 அதிகாலை 3.00 மணியளவில் அங்கு வந்த பொன்னேரியைச் சேர்ந்த சசிகுமார் (42) என்பவர், தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியைத் திடீரென தன் தோளில் தூக்கிச் சென்றுள்ளார்.

குடிபோதையில் தள்ளாடியபடி சென்ற சசிகுமார் மற்றும் அச்சிறுமி இருவரும் வெவ்வேறு மொழிகளில் (தமிழ் மற்றும் இந்தி) பேசியதை அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் கவனித்தார்.

கடத்தல்

சந்தேகமடைந்த அவர், உடனடியாகச் செயல்பட்டு சசிகுமாரை மடக்கிப் பிடித்து, ரோந்துப் பணியில் இருந்த எலிபெண்ட் கேட் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார் மற்றும் இரவு ரோந்து ஆய்வாளர் தேவி ஆகியோர் சசிகுமாரைக் கைது செய்து, சிறுமியைப் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சசிகுமார் கடந்த 3 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்வது தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநர் முருகனின் இந்தத் துரிதமான செயலைப் பாராட்டி, கூடுதல் டி.ஜி.பி. அன்பு, ஐ.ஜி. பவானீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அவருக்குப் பாராட்டுத் சான்றிதழும் வெகுமதியும் வழங்கினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.