`புலன் விசாரணையில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சுது; விஜயகாந்த்துக்கு நன்றி - சரத்குமார் பகிர்வு

2025 ஆம் ஆண்டின் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்த நிகழ்வில் `சிறந்த வில்லன் விருதை’ நடிகர் சரத்குமார் பெற்றார். அவருக்கு இந்த விருதை இயக்குநர் விக்ரமன் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு நடிகர் சரத்குமார், “வில்லனாக அறிமுகமாகி, மீண்டும் ஒரு சிறந்த வில்லனுக்கான விருதை வாங்கும்போது அது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

எனது சினிமா வாழ்க்கையில் வில்லனாக அறிமுகமானதற்கு மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சரத்குமார் - ராதிகா சரத்குமார்

புலன் விசாரணை படத்துக்காக ஒரு வில்லனைத் தேடிக்கொண்டிருந்தபோது, மேக்கப்மேன் ராஜு என்பவரின் பரிந்துரையின் பேரில் நான் வில்லனாக நடிக்கச் சென்றேன்.

அங்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி என்னிடம், `மீசை இல்லாமல் எப்படி இருப்பீர்கள்?’ என்று கேட்டார். உடனே மீசையை மழித்து வந்து காட்டிய பிறகுதான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

விஜயகாந்த் முன்னரே கணித்தபடி அந்தப் படத்தில் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. வில்லனுக்கும் ஹீரோவுக்கும் உள்ள வித்தியாசம் இவ்வளவுதான், வில்லன் பார்த்த உடனே காதலைச் சொல்லிவிடுவான். ஆனால் ஹீரோ 12-வது ரீலில்தான் சொல்வான்" என்று பேசினார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.