`தவெக-வில் இணையச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்!- கைதான அனிதா ராதாகிருஷ்ணன் `பகீர் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த 20-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதல்வர் விஜய் குறித்து அவர் ஒருமையிலும், அவதூறான வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது.

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

இது குறித்து த.வெ.க நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் காவல் நிலைய போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனிதா ராதாகிருஷ்ணன் சென்றிருந்தபோது, போலீஸார் அவரை அங்கு வைத்து கைது செய்தனர்.

அவர், தனது காரில் வர அனுமதி கோரிய நிலையில், அதை ஏற்க மறுத்த போலீஸார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  தங்களது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். சுமார் 6 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது. பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்,

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

“த.வெ.கவில் இணையச் சொல்லியும், எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியும் வற்புறுத்தினார்கள். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. தி.மு.க-விலேயே இருப்பேன். அதன் காரணமாகவே நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்து 7வது முறையாக எம்.எல்.ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம், தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.