Jana Nayagan: ஜனநாயகன் ஜூலை ரிலீஸ்: `முதல்வர்’ விஜய் படத்தின் தணிக்கைச் சிக்கல் முடிவுக்கு வந்தது!
முன்னணி நடிகராக இருந்து தற்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்றே வெளியாக வேண்டிய நிலையில், தணிக்கைக் குழுவில் (CBFC) சந்தித்த எதிர்பாராத சிக்கல்களால் வெளியாவதில் தாமதத்தை எதிர்கொண்டது. 2025 டிசம்பரில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளித்தது. அவர்கள் பரிந்துரைத்த சில திருத்தங்களையும் படக்குழு உடனடியாகச் செய்து கொடுத்தது.
சான்றிதழ் கைகளில் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், படத்திற்கு எதிராக ஒரு புகார் வந்துள்ளதால், சான்றிதழை நிறுத்தி வைத்து படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு (Revising Committee) மாற்றுவதாக தணிக்கை வாரியம் மின்னஞ்சல் அனுப்பியது.
"படம் இன்னும் வெளியாகவே இல்லை, அதற்குள் எப்படி அதன் மீது புகார் வர முடியும்?" எனக் கேள்வி எழுப்பிய படக்குழு, சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியது.
நீதிமன்ற விசாரணையின் போதுதான், படத்திற்கு முதலில் ஒப்புதல் அளித்த தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவரே, படத்திற்கு எதிராகப் புகார் அளித்திருந்தார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியானது. இதனால் சான்றிதழ் பெறுவது மாதக்கணக்கில் தாமதமானது.

இந்நிலையில், தற்போது `ஜன நாயகன்’ பட வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழு (Revising Committee) தற்போது படத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சமீபத்திய தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகவும் சான்றிதழ் வழங்குவதில் சிறு தாமதம் ஏற்பட்டிருந்தது. இந்த வார இறுதிக்குள் அதிகாரபூர்வ தணிக்கைச் சான்றிதழ் படக்குழுவின் கைகளுக்கு வந்துவிடும் என தெரிகிறது. சான்றிதழ் கிடைத்தவுடனேயே, படத்தை ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனமும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
டைட்டில் கார்டு மாற்றம்
விஜய் அவர்கள் சமீபத்தில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், படத்தில் அவரது பெயரைக் காட்டும் போது தளபதி விஜய் என்பதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் எனப் போட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் ஆரம்பித்தபோது விஜய் நிஜத்தில் முதலமைச்சர் ஆவார் என்று படக்குழுவுக்கே தெரியாது. இப்போது அவர் நிஜமாகவே தமிழ்நாட்டின் ஜன நாயகன் ஆகியுள்ளதால், இந்தப் படம் இப்போது வெளியாவது காலத்தின் பொருத்தம் எனத் தயாரிப்பாளர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஜன நாயகன் திரைப்படம் வெறும் பொழுதுபோக்குத் திரைப்படமாக மட்டுமல்லாமல், விஜய் அவர்கள் தமிழக முதலமைச்சர் என்ற உச்சபட்ச அரசியல் பதவியை அடைந்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இந்திய அளவிலும், மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தணிக்கை முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தகர்த்து, ஜூலை மாதம் ரசிகர்களைத் திரையரங்குகளில் சந்திக்க ஜன நாயகன் தயாராகி வருகிறான் என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

