முதல்வர் விஜய் குறித்து `அவதூறு பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் என்பவர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுதல், அமைதியைக் குலைத்து மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் காவல் துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, `மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், `7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகித்த ஒரு மூத்த அரசியல்வாதி, ஏன் இது போன்ற தரக்குறைவான வார்த்தைகளைப் பேச வேண்டும் எனக் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால், அனிதா ராதாகிருஷ்ணன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவிவந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


