’தில்லுமுல்லு அம்பலம்; எந்த எல்லைக்கும் செல்ல திமுக தலைமை தயாராகிவிட்டது!’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார. அவர் இது குறித்து பேசுகையில், “ஒட்டுமொத்த தமிழக மக்களின்  ஏகோபித்த ஆதரவுடன் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

குறிப்பாக பார்ட்டி பண்ட் என்ற பெயரில் தி.மு.க கொள்ளை அடித்த லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட ரூ.6,000 கோடி செலவு செய்தும் லஞ்ச ஊழலால் மக்கள் மனம் வெறுத்து தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தேர்தலுக்கு முன்பே மக்கள் தலைவர் ராகுல் காந்தியும், இன்றைய தமிழக தலைவர் மாணிக்கம் தாகூரும் தி.மு.க-வுடன் கூட்டணி சேர மனமில்லாமல் ஒரு சிலரின் சுயநல முயற்சியினால் கூட்டணிக்கு மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டனர். அவர்கள் நினைத்ததை போலவே மக்கள் விரோத தி.மு.க அரசு தோல்வியை தழுவியது.

ஆனால் தி.மு.க மறைமுகமாக அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ளாமல், மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி த.வெ.க-வை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். மாணிக்கம் தாகூர் தலைவராக மாற்றப்பட்டுள்ளது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு புத்துணர்வையும், எதிர்கால அரசியலில் ஒரு நம்பிக்கையும் தொண்டர்கள் மனதில் விதைத்துள்ளது.

கணபதி சிவக்குமார்

இதனைக் கண்டு நொந்து போன தி.மு.க தலைமை தனது தொண்டர்களை காப்பாற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை தரம் தாழ்த்தி விமர்சிப்பதோடு, இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வரும் என்று ஆருடம் சொல்ல துவங்கியுள்ளது.

இதற்கு பின்னால் பல்வேறு சதி திட்டம் நடைபெற்று  வருவது தற்போதைய திருநாவுக்கரசு உள்ளிட்ட ஐந்து பேரில் கைதுகள் மூலம் வெளிவரத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை ரூ.35 கோடிக்கு பேரம் பேசி தங்களது சதி வலையில் சிக்க வைக்க ஐந்தாண்டுகளில் தி.மு.க பல்வேறு ஊழல்களின் மூலம் சம்பாதித்துள்ள பல்லாயிரம் கோடிகள் பயன்படுத்தப்படுகிறது.

பார்ட்டி பண்ட் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் ஆயிரக்கணக்கான கோடிகளை தி.மு.க கபளீகரம் செய்துள்ளது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இதன்மூலம் தீயசக்தி திமுகவின் தில்லுமுல்லு அம்பலமாகியுள்ளது. மேற்படி கோடிகளை காப்பாற்றவும் வழக்குகளில் இருந்து அமைச்சர்களை காப்பாற்றவும் எந்த எல்லைக்கும் செல்ல தி.மு.க தலைமை தயாராகிவிட்டது. இவற்றையெல்லாம் புறந்தள்ளி தமிழக முதல்வர் செயலில் காட்டி வருகிறார். இதனை பொறுத்துக் கொள்ளாத தி.மு.க தலைமை எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் கீழ்த்தரமான வேலைகளை செய்வதை திருத்திக் கொள்ளாவிட்டால், தமிழகத்தில் எதிர்காலத்தில் தமிழக மக்கள் தி.மு.க-வை துடைத்தெறிய தயக்க மாட்டார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.