பென்னாகரம் MLA-வை புறக்கணித்து மாவட்டச் செயலாளர் நடத்திய அரசு நிகழ்ச்சி; தருமபுரி தவெக-வில் பரபரப்பு
புதிய பேருந்து வழித்தட தொடக்கவிழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ-வை அழைக்காமல் மாவட்டச் செயலாளரே தலைமையேற்று தொடங்கி வைத்தது தருமபுரி மாவட்ட தவெக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பவளந்தூர் கிராமத்திற்கு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பென்னாகரம் தவெக எம்எல்ஏ கஜேந்திரனிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் வலியுறுத்த, பென்னாகரம் பேருந்து நிலையத்திலிருந்து மருக்காரம்பட்டி வரை சென்ற அரசுப் பேருந்தை பவளந்தூர் வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டனர்.
புதிய வழித்தடத்திலிருந்து பேருந்தை இயக்க நேற்று காலை பென்னாகரம் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பவளந்துர் கிராமத்திற்கு வந்துள்ளார். அவருடன் தவெக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் சிவனும் நிர்வாகிகளும் வந்துள்ளனர்.

தவெக நிர்வாகிகள் பேருந்துக்கு மாலை அணிவித்து பூ தூவி, மேற்கு மாவட்டச் செயலாளர் சிவன் கொடியசைத்து தொடங்கி வைத்தவர். பேருந்தில் பயணச் சீட்டு வாங்கி பயணித்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி கட்சிக்குள் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இதற்கு ஏற்பாடு செய்த தொகுதி எம்எல்ஏ கஜேந்திரனை அழைக்காதது ஏன்? மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவர் எப்படி அரசு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கலாம்? என்று கஜேந்திரன் ஆதரவாளர்களும், பென்னாகரம் பகுதி மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு கோபமான எம்எல்ஏ கஜேந்திரன், தொகுதி மக்களின் கோரிக்கை வைத்தததன் காரணமாக நான் அதிகாரிகளிடம் பேசி என் ஏற்பாட்டால்தான் புதிய வழித்தடம் நீட்டிக்கப்பட்டது. அப்படியுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைக்கவில்லை என்று பென்னாகரம் போக்குவரத்துக் கிளை மேலாளரிடம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு மேலாளரோ, நான் விடுப்பில் இருந்தேன், இன்றே பேருந்து வழித்தட நீட்டிப்பு செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்திலிருந்து திடீரென உத்தரவிட்டதைத் தொடர்ந்து கிளை அலுவலர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள்.
உங்களுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்து இருப்பார்கள் என்று நினைத்தேன், அது மட்டுமல்ல, விடுப்பில் இருந்த என்னை உடனே கிளம்பி வரும்படி உங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சிவன் அழைத்ததால் நானும் வேறு வழியில்லாமல் வந்தேன்.

புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்குவது மட்டும்தான் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்தது. மற்றபடி மாவட்டச் செயலாளரிடம் கொடி அசைத்து தொடங்கி வைக்க கூறவில்லை. அந்த ஏற்பாட்டோடு வந்தது அவர்கள்தான் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் தருமபுரி மாவட்ட தவெக-வுக்குள் சலசலப்பை உண்டாக்கியுள்ள நிலையில் கட்சித் தலைமையிடம் புகார் தெரிவித்திருக்கிறார் கஜேந்திரன் எம்எல்ஏ.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

