தவெக தேனீர் விருந்தைப் புறக்கணிக்க காரணம் என்ன? - சிபிஐ வீரபாண்டியன் விளக்கம்
தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை. 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.
அப்போது, ``நேற்றைய தினம் நடைபெற்றது அரசியல் ரீதியாக அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளுக்கான ஒரு தேநீர் விருந்து மட்டுமே. அந்த விருந்தில் நாங்கள் கலந்துகொண்டு ஏதேனும் விவாதங்களோ அல்லது கேள்விகளோ எழுப்பினால், அது தேநீர் விருந்தின் நல்ல சூழலலாக இருக்காது என்பதால் நாகரிகம் கருதிப் புறக்கணித்தோம்.
தேநீர் விருந்தில் கலந்துகொண்ட ஜனநாயகச் சக்திகளுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அங்கு பங்கேற்ற எந்தவொரு கட்சி மீதும் எங்களுக்கு அரசியல் பகையோ அல்லது முரண்பாடோ கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைப் பகை என்பது ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தமும், பாஜக-வின் அரசியலும்தான்.
தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே எங்களது ஆதரவை வழங்கினோம். மக்களின் விருப்பப்படி இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
திமுகவினர் தங்களுக்குள்ள உரிமையின்படி ஆளுநரைச் சந்தித்திருக்கிறார்கள்; யார் வேண்டுமானாலும் யாரையும் சந்திக்கலாம் என்பதால், அந்த விவரங்கள் முழுமையாக வெளிவந்த பிறகு அதைப் பற்றிப் பேசலாம். இதில் விவாதிக்க எதுவும் இல்லை" என்றார்.
ஆட்சி அதிகாரம் மற்றும் குதிரைப் பேரக் குற்றச்சாட்டுகள் குறித்து எழுந்த பல்வேறு வாதங்களுக்கு ஒரே வரியில் முற்றுப்புள்ளி வைத்த அவர், சட்டத்திற்குப் புறம்பான எந்தவொரு செயலையும் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார்.
தமிழ்நாட்டு மக்கள் நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்ற உன்னதமான அரசியல் மரபுகளுக்கும், அறநெறிகளுக்கும் புறம்பான எந்தவொரு காரியத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது என்று அவர் மிக உறுதியாகத் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


