பள்ளி முதல் கல்லூரி வரை - மாணவர்களுக்கு கரம் கொடுக்கும் அமெரிக்க வாழ் தமிழர்களின் அறக்கட்டளை

அமெரிக்க வாழ் தமிழர்களால் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’, தமிழகத்தின் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் உன்னத நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் தனது 52-வது ஆண்டு மாநாட்டை இந்த அமைப்பு நடத்தியது. இதில் பல பிரபலங்களும் கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பித்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ மாணவர்களுக்கு உதவுவது குறித்து தெரிந்துகொள்ள அதன் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் 52-வது மாநாடு

நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவர், "இந்த ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 பள்ளிகளில் நாங்கள் ஒரு சிறிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். அதனை ABC என்று சொல்லுவோம். Academic Bridge Course என்பதுதான் அதன் அர்த்தம். அந்த 110 பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென்று தனியாக நாங்களே ஆசிரியர்களை நியமித்து, ஊதியம் வழங்கிப் பாடம் நடத்துகிறோம்.

இதில், மெல்லக் கற்கும் மாணவர்களே பெருமளவில் எங்கள் வகுப்பறைகளில் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதனால் பயனடைவார்கள். 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சியும் வழங்குகிறோம். அது வேலைவாய்ப்பு வழிகாட்டுதலாகவும் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாகவும் இருக்கும்.

அதுமட்டுமன்றி, பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களைக் கல்லூரி கல்விப் பயணம் என்று அழைத்துச் செல்கிறோம். கல்லூரிகளுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று, அவர்களுக்குக் கல்வியின் மீது ஓர் ஆர்வத்தையும் கனவையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

 தமிழ்நாடு அறக்கட்டளையின் 52-வது மாநாடு
தமிழ்நாடு அறக்கட்டளையின் 52-வது மாநாடு

மேலும், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் நூலக வார விழாவைக் கொண்டாடுகிறோம். நாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்தி, வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறோம். இது தவிர, ஊட்டச்சத்துக் குறைபாடு அனீமியா உள்ள குழந்தைகள் வாழும் பகுதிகளில், அவர்களுக்கு சத்துணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறோம். தவிர பார்வைத் திறன் குறைபாடுடைய பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் எங்களது பணிகளை இன்னும் தீவிரப்படுத்திச் செயலாற்றி வருகிறோம்.

பள்ளிகளில் கண் மருத்துவ முகாம்களையும் நடத்துகிறோம். முகாம் நடத்துவதோடு மட்டும் எங்கள் பணி முடிந்துவிடுவதில்லை. மாணவர்களுக்கு பார்வைத் திறனில் குறைபாடு இருந்தால், அவர்களுக்கு கண்ணாடி வழங்குவது முதல் கண் சிகிச்சை வரையிலான அனைத்துச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.

அதேபோல், கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதோடு எங்களது கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்கள் படிப்பை முடித்து வெளியேறும் வரை, ஒவ்வோர் ஆண்டும் கல்வி உதவித்தொகையைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

 தமிழ்நாடு அறக்கட்டளையின் 52-வது மாநாடு
தமிழ்நாடு அறக்கட்டளையின் 52-வது மாநாடு

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக கொரோனா கல்வி உதவித்தொகை வழங்கி வந்தோம். தற்போதும் பலர் இதன் மூலம் தொடர்ந்து பயனடைந்து வருகிறார்கள். இது போன்ற பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் இதற்கென 15 ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த 15 ஒருங்கிணைப்பாளர்களும் பள்ளிகளுக்குச் சென்று பார்வையிடுவார்கள். மாணவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்துவருகிறோம்" என்றார் நெகிழ்வாக.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.