தஞ்சாவூர்: நேருவின் உறவினர் டெண்டரை நடத்த விடாமல் தடுக்கிறாரா? - பேருந்து நிலைய கழிப்பறை சர்ச்சை
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் மூலம் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக பேருந்து நிலையம் உள்ளது.
புதிய பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பிடம் மற்றும் குளியலறைகள் செயல்பட்டு வருகின்றன. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இதனை நிர்வகிக்க டெண்டர் வைக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் இதை நிர்வகிப்பதற்கான டெண்டரை திமுக பிரமுகர்கள் சிலர் சேர்ந்து சுமார் ரூ.70 லட்சத்திற்கு எடுத்து நடத்தினர்.
ரூ.5-தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மீறி ரூ.10 வசூலிப்பதாக புகார் எழுந்தது. புதிய பேருந்து நிலைய சுற்றுச்சுவரை ஒட்டிய பொதுவெளியில் பலரும் சிறுநீர் கழிப்பார்கள். எல்லோரையும் கழிப்பறைக்கு வர வைப்பதற்காக மாநாகராட்சி நிர்வாகம் அப்போது அலாரம் சிஸ்டத்தை அறிமுகம் செய்த நிலையில் இது சர்ச்சையாக பின்னர் எடுக்கப்பட்டது.
இதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும் திமுக-வினர் சாதகமாக டெண்டர் நீடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிலரிடம் பேசினோம், வாக்கு எண்ணிக்கை தினமான கடந்த மே 4ம் தேதியுடன் கழிப்பறைக்கான டெண்டர் காலம் முடிந்து விட்டது. உடனடியாக மாநாகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கழிப்பறையைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
அப்போது பணியில் இருந்த ஆணையர் இரண்டு முறை டெண்டர் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்டு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் இரண்டு முறையும் திமுக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்து டெண்டரை நடத்த விடாமல் கேன்சல் செய்து விட்டனர். அதன் பின்னர், டெண்டர் எடுத்திருந்த திமுக பிரமுகர்களுக்கு நீட்டிப்பு செய்து கொடுக்கப்பட்டது.
அதுவும் கடந்த 30ம் தேதியுடன் முடிந்து விட்டது. மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதற்கான டெண்டரை வைத்தால் அதை எடுப்பதற்குப் பலர் தயாராக உள்ளனர். இதனால் மாநகாட்சிக்குக் கூடுதலாக வருவாய் கிடைக்கும்.

டெண்டர் நடத்தவில்லை என்றால் மாநகராட்சியே கட்டுப்பாட்டில் எடுத்து கழிப்பறையை நிர்வகிக்க வேண்டும் இதுதான் விதி. தவெக ஆட்சி அமைத்து 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. முதல்வராக ஜோசப் விஜய் இருந்தும் பல மாவட்டங்களில் அரசு சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் மூலமாக திமுக-வினர்தான் கோலோச்சி வருகின்றனர். இந்தக் கழிப்பறை டெண்டரை கூட திமுக முக்கியஸ்தர்கள் நடத்தவிடாமல் மீண்டும் நீடிப்பு செய்து ஆர்டர் வாங்கி அதன் மூலம் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.
முன்னாள் திமுக அமைச்சர் நேருவின் உறவினர் ஒருவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவர் மூலம் திமுக-வினர் டெண்டரை நடத்த விடாமல் செய்து விட்டனர். ஆட்சிதான் மாறியிருக்கிறது காட்சிகள் மாறவில்லை என்பது போல் தவெக ஆட்சியிலும் திமுக-வினர் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது.
தவெக-வினர் இதனைக் கண்டு கொள்ளவில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளும் திமுக-வினர் சொல்படியே நடக்கிறார்கள். தவெக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். மாநகராட்சி தரப்பிலோ, இதுவரை புதிய டெண்டர் நடத்துவதற்கான அறிவிப்பு வராததால் ஏற்கனவே நடத்தியவர்களுக்கு நீடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


