போராடிய காங்கோ; ஹாரிகேனால் நொறுங்கிய கனவு! - `உங்கள் தந்தை.. -பயிற்சியாளருக்கு பிரஸ்மீட்டில் பேரிடி
75 நிமிடங்கள் வரை முன்னிலை, சரித்திரம் படைக்கும் அபாரமான ஆட்டம், கோல்கீப்பரின் வீரமிக்க தடுப்புகள்... அத்தனையும் கடைசி நேரத்தில் தவிடு பொடியாகின. இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் அடித்த இரண்டு கோல்களால், 2026 உலகக் கோப்பையில் ஜனநாயக காங்கோ குடியரசின் கனவுப் பயணம் கண்ணீருடன் முடிவுக்கு வந்தது.
புதன்கிழமை நடைபெற்ற 32 அணிகள் மோதிய நாக்-அவுட் சுற்றில், இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது காங்கோ. ஆரம்பம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது. யாருமே எதிர்பாராத வகையில், ஆட்டத்தில் முன்னிலை பெற்றது காங்கோ. அந்த ஒரு கோல் முன்னிலையை கிட்டத்தட்ட ஆட்டத்தின் இறுதி வரை கட்டிக்காத்து, ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்து அணி எவ்வளவோ முயன்றும் காங்கோவின் தடுப்புச் சுவரைத் தகர்க்க முடியவில்லை. குறிப்பாக, கோல்கீப்பர் லயோனல் எம்பாசியின் ஆட்டம் பிரமிக்க வைத்தது.
தனி ஒருவனாய் போராடிய கோல்கீப்பர்!
வலது பக்கம், இடது பக்கம் என அத்தனை முனைகளிலிருந்தும் வந்த ஷாட்களைத் தடுத்து, இங்கிலாந்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் எம்பாசி. ஒரு கட்டத்தில், அவரது அபாரமான தடுப்பைக் கண்டு வியந்த இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம், தரையில் விழுந்து கிடந்த எம்பாசியை எழுந்து நின்று கட்டிப்பிடித்து தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.
ஆனால், விதி ஹாரி கேன் வடிவில் வந்தது. 75-வது நிமிடத்தில் முதல் கோலையும், 86-வது நிமிடத்தில் வெற்றிக்கான இரண்டாவது கோலையும் அடித்து, காங்கோவின் சரித்திரக் கனவைச் சிதைத்தார் ஹாரி கேன். 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
போட்டிக்குப் பிறகு பேசிய கோல்கீப்பர் எம்பாசி, "என் உடலை அறிவியலுக்கு அர்ப்பணித்து விட்டேன். ஆனால், ஹாரி கேன் ஒரு சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்பது எங்களுக்குத் தெரியும். இரண்டு முறை நாங்கள் அவர் மீது கவனம் செலுத்தத் தவறியதன் விலையைக் கொடுத்துவிட்டோம்," என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
களத்திற்கு வெளியே விழுந்த பேரிடி!
போட்டியில் தோற்ற வலி ஒருபுறம் என்றால், காங்கோ பயிற்சியாளர் செபாஸ்டியன் டெசாப்ரேவுக்கு அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அணியின் ஊடக அதிகாரி ஒரு தகவலை அவரிடம் தெரிவித்தார்.
அது, அவரது தந்தை இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி. அந்த நொடியில் டெசாப்ரேவின் முகம் அத்தனையையும் சொல்லிவிட்டது. ஆனாலும், தனது உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து அமைதியாக வெளியேறினார் டெசாப்ரே. களத்தில் ஒரு சரித்திரத் தோல்வி, தனிப்பட்ட வாழ்வில் ஒரு பேரிழப்பு என ஒரே நாளில் இரண்டு வலிகளை அவர் சந்தித்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தத் தோல்வி ஒருபுறம் இருந்தாலும், டெசாப்ரேவின் பங்களிப்பு காங்கோ கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாதது. 1974-ம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதிபெற வைத்தது, முதல் கோல்களைப் பதிவு செய்தது, முதல் வெற்றியைப் பெற்றது, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது என அவரது தலைமையில் காங்கோ அணி புதிய சரித்திரத்தையே படைத்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


