``திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்! - வைகோ காட்டாமான பேட்டி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற்வுள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது. அதே சமயம், முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் மாற்றத்துக்கு ம.தி.மு.க உறுதுணையாக இருக்கும்.

தி.மு.க கூட்டணியில் இருந்தபோது எங்கள் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்பட்டது. சுயமரியாதையைக் காக்கவே கூட்டணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

தி.மு.க-வைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தது. அந்த முயற்சிகள் குறித்து தகவல் கிடைத்ததாலேயே பொதுக்குழு முடிவின் அடிப்படையில் தி.மு.க-விலிருந்து வெளியேறினோம்.

தி.மு.க., எங்களை முதுகில் குத்தவில்லை ஆனால், நெஞ்சில் குத்திவிட்டார்கள். இருந்தாலும் எங்கள் இயக்கத்தினர் உறுதியுடன் இருக்கிறார்கள். ம.தி.மு.க மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பமாட்டார்கள்.

முதலமைச்சர் விஜய், ஒரு கரிஸ்மாட்டிக் தலைவராக உள்ளார். அவருக்குப் பின்னால் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். விஜய்க்கு இளந்தலைமுறையினரிடம் அதிக ஆதரவு உள்ளது. வருங்கால இளைய தலைமுறையினரும் விஜய் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.

அதனால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 35 முதல் 45 சதவீத வாக்குகளை த.வெ.க பெறும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலமைச்சராக விஜய் இருப்பார். அதைத் தொடர்ந்தும் பல ஆண்டுகளுக்கு விஜய் தலைமையிலான ஆட்சியே அமையும்.

தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான கூட்டணியில் நாங்கள் கௌரவமாக நடத்தப்படுவோம். கண்ணியமாக நடத்தப்படுவோம். தி.மு.க-வோடு ஏற்பட்ட கசப்பான உணர்வு விஜயுடன் இருக்கும்போது ஏற்படாது.

சமீபத்தில் த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினருக்கு 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியல் மோசடி நடந்துள்ளது. அதில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தொடர்பு குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.