4 ஆண்டுகளாக தபாலை பதுக்கிய தபால்காரர்; வீட்டில் 6 மூட்டைகளில் சிக்கிய அஞ்சல் - திருப்பூர் அதிர்ச்சி!
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறையின் தபால் சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் தபால் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்ட தபால்துறை அதிகாரிகள், அஞ்சல்காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் முறையாக தபால்களை விநியோகம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். சந்தேகமடைந்த அஞ்சல்துறை அதிகாரிகள் செந்தில்குமார் வீட்டிற்குச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குச் சென்று சேரவேண்டிய தபால்களை விநியோகம் செய்யாமல் மூட்டை மூட்டையாக வீட்டில் குவித்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பல தபால்களை தீயிட்டு கொளுத்தியும் குழிதோண்டி மண்ணிலும் புதைத்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தெரிவித்த அஞ்சல்துறை அதிகாரிகள், "வங்கிகளில் இருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட ஏ.டி.எம் கார்டுகள், ரேஷன் கார்டுகள், ஆதார் கார்டுகள், நீதிமன்ற ஆணைகள், நீட் தேர்வு தொடர்பான தபால்கள் உள்ளிட்ட பல முக்கியமான தபால்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வினியோகம் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக இப்படி செய்து வந்திருக்கிறார். 6 மூட்டைகளில் இருந்த தபால்களை அவரிடமிருந்து மீட்டுள்ளோம். செந்தில்குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


