Idhayam Murali: முதல்ல இதயம் முரளி டைட்டில் வேண்டாம்னு சொன்னேன்! - பகிரும் அதர்வா

டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் இதயம் முரளி திரைப்படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ரிலீஸையொட்டி சினிமா விகடன் சேனலுக்கு அதர்வா பேட்டியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில், இதயம் முரளி என்கிற தலைப்பை முதலில் வைக்க வேண்டாம் எனக் கூறியதாக அதர்வா குறிப்பிட்டிருக்கிறார்.

அதர்வா - இதயம் முரளி

நம்மிடையே பேசிய அதர்வா, ``உண்மையச் சொல்ல வேண்டுமென்றால், இதயம் முரளி என்ற தலைப்பு எனக்குத் தெரிந்து கடந்த 2016-ம் ஆண்டிலிருந்தே திரைத்துறையில் பேசப்பட்டு வந்தது.

இந்த இயக்குநர் பண்ணுகிறார், அந்த நடிகர் பண்ணுகிறார் என்று பல தரப்பிலும் பேசப்பட்டது. ஆனால், இறுதியில் அந்தத் தலைப்பு ஒரு நல்ல படத்திற்காக என்னை வந்து சேர்ந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. முன்பு வெளியான இதயம் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் காதல் காவியம்.

அது ஒருதலைக் காதலைப் பற்றிய கதையாக இருந்தாலும், காலப்போக்கில் அது பலரின் உணர்வாகவே மாறிவிட்டது. அந்தத் தலைப்பு, ஒருதலைக் காதல் செய்யும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு தனித்துவமான எமோஷன் தான். அதனால், இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.

முதலில் படத்திற்கு இந்தத் தலைப்பை வைக்கலாம் என்று சொன்னபோது, நான் இயக்குநர் ஆகாஷிடம், ஆகாஷ், இந்தத் தலைப்பு மட்டும் வேண்டாம், வேறு ஏதாவது மாற்றி வையுங்கள் என்றுதான் கூறினேன்.

அதற்கு முழுமையாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், அந்தத் தலைப்பை வைப்பதில் எனக்கு ஆரம்பத்தில் உடன்பாடு இல்லை. அது சரியாக இருக்குமா என்ற தயக்கம் இருந்தது. அதனால், அவர் எனக்குக் கதையைத் திரைக்கதை வடிவமாக மாற்றிக் கொடுக்கும்போதெல்லாம் வேறு ஒரு தலைப்பைப் போட்டுத்தான் தருவார்.

ஆனால், இறுதியாக இக்கதைக்கு இதுதான் மிகப்பொருத்தமான தலைப்பு என்று அவர் விளக்கியபோது, நானும் மிகுந்த உற்சாகத்தோடு, சூப்பர், இதையே பண்ணலாம் என்று சம்மதித்தேன்.

இதயம் முரளி படம்
இதயம் முரளி படம்

என் அம்மா பெரிய அளவில் எமோஷனலாகப் பேச மாட்டார். ஆனால், இந்தப் படம் ஒரு நல்ல திரைப்படமாக வர வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்து கொள் என்று அறிவுறுத்தினார். அம்மாவின் அந்த வார்த்தை என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.

அதனால், தினமும் காலையில் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே இயக்குநர் ஆகாஷிற்கு போன் செய்து விடுவேன். ஆகாஷ், இது நமக்கு மிக முக்கியமான படம். இந்த சீன் கச்சிதமாக வந்துவிடுமா? அந்த சீன் சரியாக வந்துவிடுமா? என்று தொடர்ந்து கேட்பேன்.

வழக்கமாக ஒரு திரைப்படத்திற்குப் போடும் உழைப்பை விட, அல்லது எடுத்துக்கொள்ளும் அக்கறையை விட, இந்தத் திரைப்படத்திற்கு எனக்குக் கூடுதல் பொறுப்பு இருந்தது." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.