`தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் ஸ்டாலின்; இனியாவது திருந்துங்கள் - நிர்மல் குமார்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்கு பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே திருநாவுக்கரசு இளையராஜாவைத் தொடர்புகொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

செந்தில் பாலாஜி

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த 40 நாட்களாக தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிர்மல் குமார், "தவெக எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசுகின்றனர். தவெக ஆட்சியை கவிழ்க்க கடந்த 40 நாட்களாக முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமியும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி போன்ற ஆட்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்எல்ஏக்களைத் தொடர்புகொண்டு பல கோடிகளைத் தருவதாகப் பேசுகின்றனர்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

இன்று ஒரு எம்எல்ஏவின் புகாரின் அடிப்படையில் தான் காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனால்தான் மு.க ஸ்டாலின் 30 நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்கிறார். மு.க ஸ்டாலின் தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த கெடுதலுக்காக மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிடுங்கள். முதல்வராக இருந்தவர் இதற்கு முன் தோற்றிருக்கிறாரா? இது மக்கள் உங்களுக்கு கொடுத்த பாடம். இதற்கு மேலாவது திருந்துங்கள்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.