ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், தனலட்சுமியின் நடத்தையில் விஜயகுமாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுவந்திருக்கிறது. இதுதொடர்பாக, மனைவியிடம் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார் விஜயகுமார்.
தனலட்சுமி முதலில் ஷூ கம்பெனியில் வேலைக்குச் சென்றதாகவும், இப்போது பேரணாம்பட்டு டவுன் ஆமினா வீதியில் வீட்டு வேலை செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் மூத்த மகள் அணைக்கட்டு பகுதியிலுள்ள விடுதியில் தங்கி பதினோராம் வகுப்புப் படித்துவருகிறார். மகளை வீட்டுக்கு அழைத்துவந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் விடுதிக்கு அழைத்துசென்று விட்டிருக்கிறார் தனலட்சுமி.
இதையடுத்து, ஆம்பூர் பகுதியிலுள்ள சினிமா தியேட்டருக்குச் சென்றிருக்கிறார். உடன் இரண்டாவது மகளும் இருந்திருக்கிறார். அப்போது அங்கு டிக்கெட்டுடன் சின்னவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற ஆண் நண்பர் தனலட்சுமிக்காக காத்திருந்தார். தனலட்சுமியும், குமரேசனும் சமீபகாலமாக திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துவந்ததாகவும், இப்படி அடிக்கடி வெளியில் சந்தித்துக்கொள்வதை வழக்கமாக்கியிருந்தாகவும் சொல்லப்படுகிறது.
படம் பார்த்த பிறகு, ஆண் நண்பர் குமரேசன் ஆட்டோ பிடித்து தனலட்சுமியையும், அவரின் இரண்டாவது மகளையும் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது, `குமரேசன் வந்துபோனதை அப்பாகிட்ட சொல்லக்கூடாது’ என்று மகளிடம் கூறியிருக்கிறார் தனலட்சுமி. இது எப்படியோ கணவர் விஜயகுமாருக்குத் தெரிந்துவிட்டது.
ஏற்கெனவே, வேறொரு ஆண் நண்பருடனும் தனலட்சுமி நெருக்கமாக இருந்த விவகாரமும் விஜயகுமாருக்குத் தெரியும் என்பதால், மனைவி தனலட்சுமியின் நடவடிக்கைகள் அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. இந்த நிலையில்தான் விஜயகுமாரின் வீட்டில் இருந்து நேற்றைய தினம் துர்நாற்றம் வெளியே வரத் தொடங்கியிருக்கிறது. தனலட்சுமியின் நடமாட்டம் வெளியில் இல்லாததையும், அவரின் கணவர் விஜயகுமாரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாகவும் இருந்ததால் அக்கம், பக்கத்தினர் மேல்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரியப்படுத்தினர்.

போலீஸார் வந்து வீட்டுக்குள் சென்று சோதனையிட்டபோது, சமையலறை பரண்மீது ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. பரண்மீது சுருட்டி வைக்கப்பட்ட சாக்கு மூட்டையை கீழே இறக்கி பார்த்தபோது, அதில் தனலட்சுமியின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ந்துபோயினர். கைகளின் மணிக்கட்டில் நரம்புகள் அரிவாளால் அறுக்கப்பட்டும், கால்கள் கட்டப்படும் படுகொலைச் செய்யப்பட்டிருந்தார் தனலட்சுமி. முகமும் சிதைந்துபோயிருந்தது.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக தனலட்சுமியின் உடலை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கணவர் விஜயகுமாரையும் கைது செய்திருக்கின்றனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளையும் போலீஸார் கைப்பற்றிய நிலையில், விஜயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


