அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: கழிவறையில் மறைத்து வைப்போம் - விசாரணையில் பகீர் தகவல்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும்போது அதனைத் திருடியதாக உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து கைதானவர்களில் ஒருவரான அவினாஷ் சுக்லா என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கோடிக்கணக்கான ரூபாயைத் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதோடு கோயில் உண்டியல் பணம் எண்ணுவதில் கோயில் டிரஸ்ட் பொருளாளர் அனில் மிஸ்ரா முங்கியப் பங்கு வகித்ததாகவும் சுக்லா தெரிவித்தார். அனில் மிஸ்ரா மற்றும் கோயில் டிரஸ்ட் செயலாளர் சம்பத் ராய் ஆகிய இரண்டு பேரும் கடந்த வாரம் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
சம்பத் ராயிக்கு மிகவும் நெருக்கமான தின்னு யாதவ், உண்டியல் பணம் எண்ணும் பொறுப்பாளர் சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா, உண்டியல் எண்ணும் ஊழியர்கள் அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, மணீஷ் குமார், ராம் சங்கர், கருனேஷ் பாண்டே ஆகியோரிடமும் விசாரணை நடக்க இருக்கிறது.
அவினாஷ் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், உண்டியல் பணம் எண்ணும் அறையின் ஒரு சாவி தின்னு யாதவ்விடமும் மற்றொரு சாவி வங்கி ஊழியர்களிடமும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமாகவே உண்டியல் பணம் திருடப்பட்டதாக அவர் கூறினார்.
கண்காணிப்பு கேமரா இருந்ததால் அதில் சிக்காமல் இருக்க ஒருவர் பணத்தை எடுத்துக்கொள்ள, மற்றவர்கள் அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம்போல மறைப்பை உருவாக்கினர் என்றும் தெரிவித்துள்ளார்.
கோயில் வளாகத்திற்குள் பொருத்தப்பட்ட கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டதாகவும், ஆனால் கண்காணிப்பு ஊழியர்கள் தங்களின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கவில்லை என்றும் அவினாஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட பணத்தை முதலில் அங்குள்ள கழிவறையில் மறைத்து வைப்போம் என்றும், அதன் பிறகு சரியான நேரம் அமையும் போது அதனை வெளியில் எடுத்துச்செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருடிய பணத்தில் வீடு மற்றும் நிலம் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருடிய பணத்தில் ரூ.58 லட்சம் அவினாஷ் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


