டெல்லி: ``2 நிமிடங்களில் முடிந்துவிடும் - ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி
டெல்லியில் ஓடும் காரினுள்ளே 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிழக்கு டெல்லியின் மாண்டவளி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் அளித்துள்ள புகாரில், ``எனக்கு அறிமுகமான அந்த நபர் மோமோஸ் சாப்பிடலாம் என்று கூறி காரில் அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து, காரில் எரிபொருள் (CNG) நிரப்ப வேண்டும் என்று கூறி, காரைத் திடீரென ஆள்நடமாட்டமில்லாத ஒரு வெறிச்சோடிய பகுதிக்குத் திருப்பினார்.
பாழடைந்த பகுதிக்குச் சென்றதும், காரை நிறுத்த மறுத்த அந்த நபர், என்னிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டார்.
மேலும், என் அனுமதியின்றி உடலைத் தொட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதோடு, தன்னை காரை விட்டு கீழே இறங்காதவாறு தடுத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் காரின் ஜன்னல் வழியே குதித்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என மிரட்டி தப்பினேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கொடூரமான சூழ்நிலையிலும் மனதை உலுக்கும் ஒரு வீடியோவை அந்தப் பெண் தனது மொபைல் போனில் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
அதில், "என்னை விட்டுவிடுங்கள்" என்று அந்தப் பெண் கதறி அழுவதும், அதற்கு அந்த நபர் "இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும்" என்று கூறி, பெண்ணின் நற்பெயரைக் கெடுத்துவிடுவதாக மிரட்டும் அதிர்ச்சி உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.
ஒரு கட்டத்தில் பயமும் ஆத்திரமும் அடைந்த அந்த இளம்பெண், காரின் ஜன்னல் வழியே வெளியே குதிக்க முயன்றுள்ளார். "நீ என்னை மீண்டும் தொட்டால், ஓடும் வாகனத்தின் முன்பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்; என் உடலைத் தொட உனக்கு அனுமதியில்லை" என்று அந்த நபர் முன் தைரியமாகப் போராடியுள்ளார்.
இந்த வீடியோ ஆதாரம் தற்போது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள நபரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


