கடலூர்: பண்ருட்டியில் இருவர் கொலை செய்யப்பட்டது உண்மையா ? - சம்பவத்தின் முழு பின்னணி இதுதான்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வாசலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, தமிழக மக்களை பதற்றமடைய வைத்திருக்கிறது.

மிக சரியாக 13 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் இரண்டு பேர் கீழே அசைவற்று கிடக்கின்றனர். அந்த நிலையிலும் அவர்களை தாக்கும் நான்கு பேர், அதன்பிறகு நிதானமாக அங்கிருந்து தங்கள் இருசக்கர வாகனங்களில் ஏறிச் செல்கிறார்கள். அந்த சம்பவத்தை பேருந்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர், பொதுவெளியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யபட்டிருக்கிறார்கள் என்ற தகவலுடன் முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

பண்ருட்டி வைரல் வீடியோ

அதையடுத்து, `தமிழகம் உத்திரப்பிரதேசமாக மாறிவிட்டதா…?’ போன்ற வாசகங்களுடன், அனைவரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ குறித்து கடலூர் மாவட்டக் காவல்துறையிடம் விசாரித்தபோது, ``இந்தச் சம்பவம் கடந்த 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்மாம்பட்டு, காந்தி நகர் என்ற இரு கிராமத்தைச் சேர்ந்த சிலர் புதுச்சேரிக்குச் சென்று மது குடித்திருக்கிறார்கள். அப்போது இரண்டு தரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு அங்கிருந்து இரண்டு தரப்பும் கிளம்பிவிட்டார்கள்.

காந்தி நகரைச் சேர்ந்த ஆறு பேர் காரிலும், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் இரண்டு இருசக்கர வாகனத்திலும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அனைவருமே முழு மது போதையில் இருந்தனர்.

திருவதிகை என்ற பகுதியில் காரில் சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கீழ்மாம்பட்டு இளைஞர்களை வழிமறித்துத் தாக்கிவிட்டு வேகமாகச் சென்றனர்.

ஆனால் அடிவாங்கியவர்கள் அந்தக் காரை பின் தொடர்ந்து வந்து பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வாசலில் வழிமறித்து, அதில் இருந்தவர்களை இழுத்து கீழே தள்ளியிருக்கிறார்கள். அப்போது கீழே விழுந்த இரண்டு பேரையும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருந்த அதே வேளையில், காரையும் கல்லால் அடித்திருக்கிறார்கள்.

கைது
கைது

அதனால் காரில் இருந்த நான்கு பேர் அங்கிருந்து தப்பிவிட்டார்கள். கீழே விழுந்தவர்கள் போதையில் இருந்ததால் அவர்களால் திருப்பித் தாக்க முடியவில்லை. அதனால் அவர்களை அடித்துவிட்டு, கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தப்பிவிட்டார்கள். கீழே கிடந்தவர்களுக்கு இலேசான காயங்கள்தான். அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள். சம்பவம் நடைபெற்ற அன்றே வழக்குப் பதிவு செய்து மூன்று பேரை கைது செய்துவிட்டோம். தலைமறைவாக இருக்கும் ஒருவரை தேடி வருகிறோம். ஆனால் இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரியாமல், கொலை என்று தவறான செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்கள்” என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.