`இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும்; ஏனென்றால்..! - நிர்மல் குமார்
தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (ஜூன்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது அவர், "திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கச் செயல்பட்டார்கள். அதனால்தான் அவர்களின் கூட்டணிக் கட்சிகளில் இருந்து அவ்வளவு பேர் வெளியேறி இருக்கின்றனர்.
குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். பிற கட்சிகளில் இருந்து யாராவது வெளியேறினால் அதற்கும் தவெக-விற்கும் எந்த தொடர்பும் இல்லை.
எந்தக் கட்சியில் இணைந்து செயல்படுவது என்பது அவரவர் முடிவு. தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் என்பது உறுதியாகி உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி, இ.பி.எஸ், அவருடைய மகன் மற்றும் சில தொழிலதிபர்கள் இணைந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்.
மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரும் இபிஎஸ் குடும்பத்தினரும் தங்கள் குடும்ப சொத்தை காக்கவே இந்த முயற்சி செய்கின்றனர். பல வழக்குகள் வரும் என்ற பயத்தில் இன்று காலை வரை திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்கின்றன.

திமுக, அதிமுக சேர்ந்து பாஜக-விடம் சரண்டர் ஆகி, ஒரு கேபினட் இடம் கேட்டு நிற்கப் போகின்றன. இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும். ஸ்டாலினும், எடப்பாடியும் வீட்டுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுவிட்டு கட்சியை இணைத்து விடுவார்கள். இவர்கள் பதவிக்கு ஆசைப்படுவதால் மற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகுகின்றனர்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

