’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?
அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக எஸ்.பி. வேலுமணி, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்.பி. வேலுமணி, “நான் சென்னைக்குப் புதுசாவா போறேன்? வாரத்தில் 2 நாள் போகிறேன். ஒரு பரபரப்பும் இல்லை, நீங்கள்தான் பரபரப்பு பண்ணிட்டிருக்கீங்க. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க, த.வெ.க செல்ல நீங்களே சொல்கிறீர்களா?
சென்னை போகிறேன், அவ்வளவுதான். மீடியாவில் உள்ள நீங்கள் அ.தி.மு.க-வில் நாங்க எல்லாம் இருக்கக் கூடாது என முடிவு செய்து செய்தி போடுகிறீர்களா எனத் தெரியவில்லை. காலையில் இருந்து நீங்கள்தான் பிளாஸ் நியூஸ் போடுகிறீர்கள்” என்றார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகரைச் சந்திக்க உள்ளீர்களா, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா என்ற கேள்விகளுக்கு, “எதுவாக இருந்தாலும் உங்களைக் கூப்பிடுகிறேன்” என்றபடி பதில் அளிக்காமல் சென்றார்.
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.
இதன்படி கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். பின்னர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைந்த நிலையிலும், அவருக்கு பழைய பதவி வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இதனிடையே எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் என்ற மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டாலும், அவரது பழைய பதவியான அ.தி.மு.க-வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் என்பது, கோவை புறநகர் மத்திய மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு அவரது போட்டியாளர்களான செ.ம.வேலுசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல அவரது ஆதரவாளர்களுக்கு மீண்டும் பழைய பதவிகள் வழங்கப்படாததால் எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் உள்ளார். இதனால் எஸ்.பி. வேலுமணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணியின் சென்னை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

