ஷிண்டே அணிக்குத் தாவிய சட்டமேலவை உறுப்பினர் சச்சின்; தொடர்ந்து உத்தவிடமிருந்து விலகும் விசுவாசிகள்!
மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சமிபத்தில்தான் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி-க்கள், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து உத்தவ் தாக்கரே மீள்வதற்குள் மேலும் ஓர் அதிர்ச்சியை ஏக்நாத் ஷிண்டே அணி கொடுத்து இருக்கிறது. உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக சட்டமேலவை உறுப்பினராக இருப்பவர் சச்சின் அஹிர். இவர் திடீரென ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளார்.
சட்டமேலவையில் துணைத் தலைவர் பதவிக்கான பதவி நீண்ட நாள்களாக காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு சச்சின் அஹிர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்பு மனு தாக்கலின்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ர பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சச்சின் அஹிர் மும்பை அரசியலில் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நம்பிக்கையான ஒரு நபராக இருந்தார்.
அதோடு தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற மும்பை ஒர்லி தொகுதியை ஆதித்ய தாக்கரேவுக்காக விட்டுக்கொடுத்தார். எனவே சச்சின் அஹிர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தலைவராக இருந்தார். ஆனால் அவரும் அணி மாறி இருப்பது, உத்தவ் தாக்கரேவால் ஜீரணிக்க முடியவில்லை. மில் தொழிலாளர்கள் சங்கத் தலைவராக வாழ்க்கையைத் தொடங்கிய சச்சின் அஹிர், ஒர்லி தொகுதியில் இருந்து மூன்றுமுறை வெற்றி பெற்று இருக்கிறார்.
அவர் தனது தொகுதியை ஆதித்ய தாக்கரேவுக்கு விட்டுக்கொடுத்ததால், அவருக்கு சட்டமேலவை உறுப்பினர் பதவியை உத்தவ் தாக்கரே கொடுத்தார். வரும் நாள்களில் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் தங்களது கட்சியில் வந்து சேருவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் உத்தவ் தாக்கரே திணறி வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


