ஆந்திர மாணவி தவறவிட்ட சான்றிதழ்கள்; உதவிய ஏஐ; நூறு பஸ்களில் சோதனை நடத்தி கண்டுபிடித்த கேரள போலீஸ்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜாஷ்னவி என்ற 17 வயது மாணவி, எல்.எல்.பி நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக தனது தாய் லலிதா ராணியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவுக்குச் சென்றிருந்தார்.

அன்று காலை 10:30 மணிக்கு காக்கநாடு ராஜகிரி கல்லூரியில் ஜாஷ்னவிக்குத் தேர்வு இருந்தது. மதியம் 12 மணிக்குத் தேர்வு முடிந்தது. இரவு 8 மணிக்குத்தான் அவர்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்பதால், இடைப்பட்ட நேரத்தில் கொச்சியிலுள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மரைன் டிரைவ் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தனர்.

​அதன்படி, ஒரு தனியார் பேருந்தில் ஏறி உயர் நீதிமன்ற சந்திப்பில் வந்து இறங்கினர். அப்போது அவசரத்தில், சான்றிதழ்களும் பணமும் இருந்த பையை பேருந்தின் லக்கேஜ் கேரியரிலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டனர்.

பையைத் தவறவிட்டதை உணர்ந்த அவர்கள், உடனடியாக மற்றொரு பேருந்து மூலம் வைட்டிலா பகுதியை அடைந்தனர். அங்குள்ள போக்குவரத்து உதவி மையத்தை அணுகினர். மாணவி தெலுங்கில் பேசியதை போக்குவரத்து போலீஸாரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இதையடுத்து ​அங்கு பணியில் இருந்த இடப்பள்ளி போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ ஜாய் ஜான், ஏ.எஸ்.ஐ பி.ஆர். ஜிஜேஷ் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சபோத் ஆகியோருக்கு, மாணவியும் அவரது தாயும் பேசிய தெலுங்கு கலந்த ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

காவல்துறையினர் உடனடியாக தங்களது மொபைல் போனில் அவர்களது பேச்சைக் குரல் பதிவு செய்து, கூகுள் ஜெமினி ஏஐ செயலி மூலம் அவர்களது மொழியை மலையாளத்தில் மொழிபெயர்த்து, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொண்டனர்.

தனியார் பஸ்

அவர்களிடம் பேருந்து டிக்கெட்டும், ஜாஷ்னவி பஸ்ஸில் வைத்து தனது போனில் தற்செயலாக எடுத்த 4 வினாடி வீடியோவும் மட்டுமே ஆதாரங்களாக இருந்தன. அன்று விடுமுறை நாள் என்பதால், பேருந்து உரிமையாளர்கள் சங்க அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

இதனால் டிக்கெட் எண்ணை வைத்து பேருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. ​ஆனாலும் சோர்ந்து போகாத போலீஸார், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அந்தப் பகுதிக்கு வரும் ஒவ்வொரு பேருந்தாக ஏறி சோதனை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி சுமார் நூறு பேருந்துகளில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரமாகியும் பை கிடைக்காததால் தேடுதல் வேட்டையை முடிக்க போலீஸார் திட்டமிட்டனர்.

ஆந்திர மாணவி தவறவிட்ட பையை கண்டுபிடித்து கொடுத்த கேரள போலீஸ்
ஆந்திர மாணவி தவறவிட்ட பையை கண்டுபிடித்து கொடுத்த கேரள போலீஸ்

அப்போது ​அங்கிருந்த ஒரு பேருந்து ஊழியர், மாணவியின் மொபைலில் இருந்த 4 வினாடி வீடியோவை உற்றுப் பார்த்து அது வைட்டிலாவிலிருந்து தம்மனம் வழியாகச் செல்லும் பிரண்ட்ஸ் பேருந்து என்று கூறினார். உடனடியாக போலீஸார் அந்தப் பேருந்தை மடக்கிச் சோதித்தபோது, மாணவியின் பை பத்திரமாக அங்கேயே இருந்தது.

​தவறிய சான்றிதழ்கள் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில், கேரளா காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு ஜாஷ்னவியும் அவரது தாயும் ஆந்திராவிற்குப் புறப்பட்டனர்.

தொழில்நுட்பமும், மனிதநேயமும் இணைந்த இந்தச் சம்பவம் தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.