இது சூர்யாவின் அடுத்த கட்டம்! ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ உடன் இணையும் சூர்யா48.. ‘ஜெய் பீம்’ கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணியான சூர்யா மற்றும் இயக்குநர் டி.ஜே. ஞானவேல், ‘ஜெய் பீம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய பிரம்மாண்டத் திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர். ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ மற்றும் ‘சலார்’ போன்ற இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களைத் தயாரித்த முன்னணி நிறுவனமான ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ (Hombale Films) இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. சூர்யாவின் 48-வது திரைப்படமாக உருவாகும் இந்த மெகா ப்ராஜெக்ட், இன்று ஜூன் 29-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் அறிவிப்போடு வெளியிடப்பட்ட சிறப்புக் குறிப்பில், “மூன்று தசாப்தங்களாகத் திரையில் உண்மையை விதைத்தவர். கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர். இந்த தலைமுறையின் மிகத் துணிச்சலான நடிகர், இப்போது தனது மிகப்பெரிய மேடையில் கால் பதிக்கிறார்!” என சூர்யாவின் கலைப் பயணத்தைப் பாராட்டி ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தனது உற்சாகத்தைப் பகிர்ந்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை காயடு லோஹர் நடிக்கிறார். ‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இசையமைப்பாளர் சாய் அபியங்கர் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர். கதிர் மற்றும் படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று காலை பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எளிமையாகத் தொடங்கியுள்ளன.

படத்தின் கதைக்களம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், இது மறைந்த புகழ்பெற்ற ‘5 ரூபாய் மருத்துவர்’ டாக்டர் திருவேங்கடம் வீரராகவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட படமாக இருக்கலாம் எனக் கோலிவுட் வட்டாரங்களில் பெரிதும் பேசப்படுகிறது. சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ழகரம் ஸ்டுடியோஸ்’ இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளது. தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் முன்னணியில் இருக்கும் சூர்யா, ஹோம்பாலே பிலிம்ஸ் போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்திருப்பது, இந்தத் திரைப்படம் பான்-இந்தியா அளவில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.