கரூர்: டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை!
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது: 48). இவர், மறவாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இரவு 10 மணியளவில் வழக்கம்போல் டாஸ்மாக் பாரில் பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காளிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு தயாராக இருந்த மர்ம நபர்கள் ராஜேந்திரனை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டினர். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பின்னர், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்நிலையில், மறுநாள் காலை ராஜேந்திரன் வேலைக்கு வராததால் அவருடன் பணிபுரியும் அரவிந்த் என்பவர் ராஜேந்திரனை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டார்.
ஆனால், அவர் செல்போனை எடுக்காததால் ராஜேந்திரனை தேடி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காளிபாளையம் அருகே சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் ராஜேந்திரன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரவிந்த், ராஜேந்திரனின் தாயார் வேலம்மாளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது மகனின் நிலையைக் கண்டு கதறி அழுதார். இது குறித்து, வேலம்மாள் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) மேனகா வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpg?resize=390%2C205)
