`ஐயாவுக்காக சொத்தை அடமானம் வைத்து கடனில் தவிக்கிறோம்; நட்டாற்றில் விட்டதுபோல... - பாமக அருள்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது. தைலாபுரத்தில் தந்தையும் மகனும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டது, மகிழ்ச்சி அளிப்பதாக அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், அவர்களின் உண்மை மனநிலையோ வேறாக இருக்கிறது. குறிப்பாக ராமதாஸ் பக்கம் நின்ற சேலம் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் சேலத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அருள் அலுவலகத்தில் பா.ம.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பா.ம.க அருள்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருள், "மருத்துவர் ஐயாவும் அவரின் மகனும் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்றரை வருடத்திற்கு முன்பு இணைந்திருந்தால் கோடிகளில் கடன்பட்டிருக்க மாட்டோம். ஐயாவுக்காகவும் கட்சிக்காகவும் சொத்தை அடமானம் வைத்து கடனில் தவிக்கிறோம். அதுமட்டுமன்றி முடிந்த தேர்தலில் பத்து அல்லது பதினைந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூடுதலாக தேர்வாகி இருப்பார்கள். கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கும். துணை முதல்வர் ஆகியிருப்போம். வாக்கு விழுக்காடும் இரண்டு சதவிகிதம் குறைந்திருக்காது. நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்து எந்த கட்சிக்கும் செல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியிலேயே இருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். ஆனால், தற்போது எங்களை நட்டாற்றில் விட்டதுபோல் எண்ணுகிறோம். எந்த முடிவாக இருந்தாலும் அடுத்த இரண்டு நாள்களில் சொல்கிறோம்" எனக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.