`ஸ்டாலின் இப்படிச் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல - சிபிஐ வீரபாண்டியன் விமர்சனம்!
சென்னை வானகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ``எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். எனவே, திமுக தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்" என உரையாற்றினார். இந்த நிலையில், பெரம்பூரில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மாநில அரசு விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தற்போதைய நிதிநிலை அதற்கு சரிவரவில்லை என்றால், அதுவரை விவசாயிகளிடம் கடன் வசூல் செய்யக் கூடாது என வலியுறுத்துகிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் போதுமானதாக இல்லை. அதை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
செல்வ வளங்களை உருவாக்கி உயர்த்தும் ஏழை, எளிய உழைப்போரின் கோரிக்கைகளை சிபிஐ முன்மொழிகிறது. ஜனநாயகத்தைக் காக்க இடதுசாரிகள் தனித்தும், அல்லது கூட்டணியுடனும் களமாட முடியும். எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதை மதிக்கிறோம். எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பழுத்த அரசியல் தலைவர். கலைஞரிடம் அரசியல் பயின்றவர். இப்போதுதான் புதிய அரசு அமைந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது.
இது மக்களின் முடிவு. இதை மதிக்க வேண்டும். எனவே, அவரும் ஜனநாயக முறையில் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் அவர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என அவர் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல. இந்த ஆட்சி அமைந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அதிமுக - திமுக போன்ற கட்சிகளின் அனுபவம் வேறு என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். புதிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

