ராணிப்பேட்டை: மலையில் துளைத்திருந்த ராணுவ வெடிகுண்டு - பாதுகாப்பான முறையில் அழித்த நிபுணர் குழு!

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த புங்கனூர் ஊராட்சி வெள்ளங்குளம் கிராமத்திலுள்ள வரதேசி மலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விறகுகளை சேகரிப்பதற்காக மலைப் பகுதியில் ஏறினார். அப்போது, மண்ணில் துளைத்திருந்த நிலையில், இரும்பினாலான ஒரு மர்ம பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி, கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் வெங்கடேசன் தகவல் தெரிவித்தார். முன்னாள் ராணுவ வீரரும் மலைப் பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, அது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் `மோட்டார் வகை வெடிகுண்டு’ எனத் தெரியவந்தது.

வெடிகுண்டு

உடனடியாக, திமிரி காவல் நிலையப் போலீஸாரிடம் தெரியப்படுத்தினர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அங்குசென்று ஆய்வு செய்தனர்.

சுற்று பரப்பில், வெடித்த நிலையில் ஒரு குண்டும், வெடிக்காத நிலையில் மண்ணில் துளைத்திருந்த ஒரு குண்டும் இருப்பதை கண்டறிந்தனர். அதனருகில், மக்கள் யாரும் செல்லாத வகையில் குண்டைச் சுற்றிலும் மணல் மூட்டைகளை அடுக்கி, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

விசாரணையில், வரதேசி மலைப்பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் கடந்த 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டு, ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதும், முகாம் நிறைவுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக வெடிக்காத அந்த குண்டு விட்டுச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.

இந்த வகை மோட்டார் வெடிகுண்டுகள், பதுங்கு குழிகளை அழிக்கவும், எதிரிகளை முன்னேற விடாமல் தடுக்கவும் ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அழிக்கப்பட்ட வெடிகுண்டு

இது குறித்து, சென்னையிலுள்ள ராணுவ முகாம் அலுவலகத்துக்கு போலீஸார் தகவல் கூறினர். இதையடுத்து, இன்று 5 பேர் கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் வரதேசி மலைப் பகுதிக்கு வந்தனர்.

முறையான முன்னேற்பாடுகளை செய்து, அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து முழுவதுமாக அழித்தனர். இந்த நடவடிக்கையால், அப்பகுதியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.