அந்த இடம் சர்கஸ் கூடாரம் போல இருந்தது - பாக்யராஜின் இறுதி அஞ்சலி குறித்து ராதிகா சரத்குமார்

இந்தியத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் கே. பாக்யராஜ் நேற்று முன்தினம் (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

பாக்யராஜ் மறைந்த நாளிலேயே அவரது உடல் மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, யூடியூப் சேனல்கள், புகைப்படக் கலைஞர்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கேமராக்களுடன் சூழ்ந்து கொண்டனர்.

பாக்யராஜ்

இதனால் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அந்த நேரத்தில் மிகவும் உடைந்த மனநிலையிலிருந்த நடிகை ராதிகா, கண்ணீருடன் ஊடகங்களை நோக்கி, "உங்களுக்கு டி.ஆர்.பி. வேண்டுமென்றால் நாங்கள் நடித்துக் கொடுக்கிறோம். ஆனால் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை தயவு செய்து கெடுக்காதீர்கள்" என்று கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக் கொண்டார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலர் ராதிகாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், சிலர் அவர் மீது விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் ராதிகா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "50 ஆண்டுகால விசேஷமான நட்புக்கு எனது இறுதி விடைபெறுதல். பாக்யராஜ் சார் ஒரு சிறந்த படைப்பாளி, முதிர்ந்த எழுத்தாளர் மற்றும் சினிமாவில் அற்புதமான எல்லைகளை வகுத்த ஒரு மனிதர். அவருடன் நான் பல மகிழ்ச்சியான தருணங்களையும், அற்புதமான படைப்புகளையும் பகிர்ந்திருக்கிறேன்.

எனது குடும்பத்திற்கு எப்போதும் தனது அமைதியான, விசுவாசமான வழியில் உறுதுணையாக நின்றவர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியளிக்கும் விடைபெறுதல்.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

அனைவரும் மற்ற விஷயங்களை மறந்து, அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய ஒரு இடம், சர்கஸ் கூடாரம் போல இருந்தது. எப்போது, எங்கே நாம் இந்த அளவுக்கு இரக்கமற்றவர்களாக மாறினோம் அல்லது மாற்றப்பட்டோம்?

அரசாங்கமும், சினிமாத்துறையும் ஒன்றிணைந்து அமர்ந்து, இதற்கான நெறிமுறைகளையும் கூட்டு நிர்வாகத்தையும் வகுக்க வேண்டும். மேலும், மறைந்த அந்த ஆன்மாவிற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.