கச்சா எண்ணெய் விலை சரிவு: ஆனால், பெட்ரோல், டீசல் விலை? - மோடி அரசிடம் கார்கே கேட்கும் 3 கேள்விகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னும், இந்தியாவில் ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கேட்டுள்ள மூன்று கேள்விகள்...

"பாஜகவின் பகற்கொள்ளை மற்றும் பிக்பாக்கெட் அடிக்கும் குணம் -

கச்சா எண்ணெய் விலை பாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருக்கிறது,

இருந்தும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைத்து மக்களுக்கு நிம்மதி தருவதற்குப் பதிலாக...

பெட்ரோல்

மோடி அரசு மக்களின் சேமிப்பைப் பிழிந்தெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறது

எங்களது மூன்று கேள்விகள் -

1. மேற்கு ஆசியாவில் போர் உச்சத்தில் இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $138 டாலராக இருந்தது.

அப்போதே பெட்ரோல் ₹94.77-க்கும், டீசல் ₹87.67-க்கும் விற்கப்பட்டது.

இன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $70.71 டாலராகக் குறைந்துவிட்டது.

அப்படியிருந்தும் மோடி அரசு ஏன் இன்னும் பெட்ரோலை ₹102.12-க்கும், டீசலை ₹95.20-க்கும் விற்றுக் கொண்டிருக்கிறது?

2. போரைக் காரணம் காட்டி, வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை பாஜக அரசு இருமடங்காக உயர்த்தியது.

இப்போது விநியோகம் சீராகிவிட்ட பிறகும், எல்பிஜி விலையை ஏன் பழையபடி குறைக்கவில்லை? பொதுமக்களுக்கு ஏன் ஒரு பைசா கூட நிம்மதி கிடைக்கவில்லை?

3. வீட்டு உபயோக சிலிண்டர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பயன்படும் 5 கிலோ சிறிய சிலிண்டர்கள், மற்றும் சிஎன்ஜி என எல்லாவற்றின் விலையையும் ஏற்றிவிட்டார்கள்.

இப்போது நிலைமை சாதாரணமாகிவிட்ட பிறகும், விலையைக் குறைப்பதற்கு மோடி அரசின் கைகள் ஏன் நடுங்குகின்றன?

கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதும் பொதுமக்கள்தான் அவதிப்பட்டார்கள். இப்போது கச்சா எண்ணெய் விலை மலிவாக இருக்கும்போதும் ஏன் பொதுமக்களே சுமையைத் தாங்க வேண்டும்?

விஷயம் மிகத் தெளிவு — பாஜகவுக்கு வரி என்ற பெயரில் பணத்தைப் பிடுங்குவதற்கும், கல்லா கட்டுவதற்கும் பொதுமக்கள் வெறும் ஒரு கருவியாக மட்டுமே மாறிவிட்டார்கள்!!"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.