Doctor Vikatan: முதல் குழந்தை பிறந்த பிறகும் மலட்டுத்தன்மை பாதிக்குமா?

Doctor Vikatan: என் வயது 37.  நான்கு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்போது அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்கிறோம். ஆனால், கரு தங்கவில்லை. 

இந்நிலையில் என் தோழி ஒருத்தி, முதல் குழந்தை பிறந்த பிறகும்கூட மலட்டுத்தன்மை எனப்படும் குழந்தையின்மை பிரச்னை பாதிக்கலாம் என்கிறாள். ஒருமுறைகூட கருத்தரிக்கவே முடியாத நிலையைத்தானே மலட்டுத்தன்மை என்போம்...

எனக்கு இரண்டாவது குழந்தையைக் கருத்தரிப்பதில் உள்ள சிக்கலையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இதை விளக்க முடியுமா?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

உங்கள் தோழி சொன்னது மிகவும் சரியானதுதான். இதை செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி (Secondary Infertility) என்று சொல்வோம். செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி என்பது ஏற்கெனவே ஒருமுறை எளிதாகக் கருத்தரித்து குழந்தைப் பேறு அடைந்த தம்பதியினருக்கு, இரண்டாவது முறை கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் குறிப்பது.

ஒரு வருடம் முயற்சி செய்தும் இரண்டாவது முறை கருத்தரிக்க இயலவில்லை என்றால், அதுவும் செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி எனப்படுகிறது.

பெண்ணின் வயது 35-க்கு மேல் இருந்தால், 6 மாதங்கள் முயற்சி செய்தும் கருத்தரிக்கவில்லை என்றால் அதையும் செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி என்றே சொல்வோம். இதற்கு முறையான மருத்துவ ஆய்வு அவசியம். பெண்ணுக்கு 30 வயதுக்கு மேல் ஆகும்போது கருவுறுதல் திறன் குறையத் தொடங்குகிறது.

35 வயதுக்கு மேல் அது மிக வேகமாகக் குறைகிறது. 37 வயதில் இன்னும் குறைகிறது. இதற்கு கருமுட்டைகளின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதே முக்கிய காரணம்.

சினைப்பை நீர்க்கட்டிகள் (பிசிஓஎஸ்) போன்ற வளர்சிதை மாற்றப் பிரச்னைகள், தைராய்டு கோளாறுகள், உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, அதிக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை கருமுட்டை வெளிப்படுவதைப் பாதிக்கின்றன.

இடுப்புப் பகுதியில் ஏற்படும் தொற்றுகள் (Pelvic infections), காசநோய் (TB), எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) அல்லது முந்தைய அறுவை சிகிச்சைகளால் குழாய்களில் அடைப்பு அல்லது ஒட்டுதல்கள் ஏற்படுவதும் காரணமாகலாம்.

சினைப்பை நீர்க்கட்டிகள் (பிசிஓஎஸ்) போன்ற வளர்சிதை மாற்றப் பிரச்னைகள், தைராய்டு கோளாறுகள், உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, அதிக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை கருமுட்டை வெளிப்படுவதை பாதிக்கின்றன.

செகண்டரி இன்ஃபெர்ட்டிலிட்டி ஏற்பட ஆண்கள் தரப்பிலும்  காரணங்கள் உண்டு. விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது நகரும் வேகம் குறைதல், உடல் பருமன், புகைப்பழக்கம், மது அருந்துதல், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆண்களின் கருவுறுதல் திறனைப் பாதிக்கலாம்.

கர்ப்பப்பையின் உள்பகுதியிலுள்ள திசுக்கள் கர்ப்பப்பைக்கு வெளியே (சினைப்பைகள் அல்லது குழாய்களில்) வளர்வதுதான் எண்டோமெட்ரியோசிஸ். இது கருமுட்டையின் தரத்தையும் எண்ணிக்கையையும் குறைப்பதோடு, உறுப்புகளின் அமைப்பையும் (Anatomy) மாற்றியமைக்கும். 

ஃபைப்ராய்டு கட்டிகள், எண்டோமெட்ரியல் பாலிப் அல்லது கர்ப்பப்பை தசைச் சுவரில் திசுக்கள் வளரும் அடினோமயோசிஸ் (Adenomyosis) பாதிப்பு மற்றும் முந்தைய அறுவை சிகிச்சைகள்  போன்றவையும் கரு பதிந்து வளர்வதைத் தடுக்கலாம். 

நோயாளியின் முந்தைய மருத்துவ மற்றும் மகப்பேறு வரலாறு, சர்க்கரை நோய் அல்லது பிசிஓஎஸ் போன்ற பிரச்னைகள் குறித்துக் கேட்டறியப்படும். ஸ்கேன் மூலம் கருமுட்டை சரியான நேரத்தில் வளர்ந்து வெடிக்கிறதா (Follicular Monitoring)  என்பதற்கான சோதனை செய்யப்படும். 

தைராய்டு, புரோலாக்டின் மற்றும் கருமுட்டை இருப்பை அறிய ஏஎம்ஹெச் (AMH) சோதனைகள் செய்யப்படும்.
கர்ப்பப்பையில் கட்டிகள் இருக்கின்றனவா என்று ஸ்கேன் மூலமும், குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்று ஹெச்எஸ்ஜி   (HSG) பரிசோதனை மூலமும் கண்டறியப்படும்.
ஆண்களுக்கு விந்தணு பகுப்பாய்வு (Semen Analysis) செய்யப்படும்.

மற்ற சிகிச்சை முறைகள் பலன் அளிக்காத நிலையில் ஐ.யு.ஐ (IUI) அல்லது சிலருக்கு ஐ.வி.எஃப் (IVF) சிகிச்சைகள் தேவைப்படலாம்.

முதலில் உடல் எடை மேலாண்மை, மன அழுத்தத்தைக் குறைத்தல், சரியான தூக்கம் மற்றும் உணவுமுறை போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தைராய்டு அல்லது ஹார்மோன் பிரச்னைகள் மருந்துகள் மூலம் சரிசெய்யப்படும். 

கருமுட்டை வளர்ச்சியைத் தூண்ட மருந்துகள் (Ovulation induction drugs) வழங்கப்படும். கட்டிகள் அல்லது எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு இருந்தால், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யப்படும். மற்ற சிகிச்சை முறைகள் பலன் அளிக்காத நிலையில் ஐ.யு.ஐ (IUI) அல்லது சிலருக்கு ஐ.வி.எஃப் (IVF) சிகிச்சைகள் தேவைப்படலாம்.

செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி என்பது பெரும்பாலான நிலைகளில்  குணப்படுத்தக்கூடியதே. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை மூலம் மீண்டும் கர்ப்பம் தரிக்க முடியும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.