முஹர்ரம்: ``15,000 பேரைக் கொல்ல சதி செய்தேன் - விஷ மாத்திரைகள் விநியோகித்தவர் பரபரப்பு வாக்குமூலம்

மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபரை மும்பை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.

``மொஹர்ரம் ஊர்வலத்தைக் குறிவைத்து, எலி விஷமாகப் பயன்படுத்தப்படும் சிங்க் பாஸ்பைடு (Zinc Phosphide) நிரப்பப்பட்ட மாத்திரைகளை விநியோகித்து, குறைந்தது 15,000 பேரைக் கொல்வதே எனது நோக்கம்" என்று அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக NDTV தெரிவித்திருக்கிறது. இந்தப் பெரும் சதியை மும்பை காவல்துறை முறியடித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரேம்ஜி

பைகுல்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்குச் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் மாத்திரைகளை விநியோகிப்பதைக் கவனித்து அவரைப் பிடித்தார்.

இதுகுறித்து மத்திய மண்டலம்-1-ன் துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் மீனா கூறுகையில், ``அதிகாலை 4 மணியளவில், சல்மான் என்ற நபர் இந்த மாத்திரைகளில் ஒன்றை உட்கொண்டதால் வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு அடைந்தார். இந்தச் சம்பவத்தை முதலாகக் கொண்டு தீவிரமாகப் புலனாய்வு செய்த காவல்துறை, சந்தேக நபரான பிரேம்ஜியைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

மாத்திரைகளை பெயின் கில்லர் என்று பொய் கூறி விநியோகம் செய்து, பெருமளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தச் சதி செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பெயிண்ட் வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் தொடர்புகளைப் பயன்படுத்தி 50 கிலோ சிங்க் பாஸ்பைடு கெமிக்கலையும், ஆன்லைன் மூலமாக 30,000 வெற்று மாத்திரை உறைகளையும் (Empty Capsules) வாங்கியுள்ளார்.

கடந்த 15 நாள்களாக மும்பையில் தங்கியிருந்து இந்த நச்சு மாத்திரைகளை அவர் தயாரித்துள்ளார். இதுவரை 14,900 விஷ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய மாத்திரைகள் மற்றும் ரசாயனங்கள் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது

காவல்துறையினரின் துரிதமான மற்றும் விழிப்புணர்வான செயல்பாட்டினால், ஏற்படவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதமும், பேரழிவும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் வெளிநாட்டுப் பயணப் பின்னணி குறித்தும், இந்தச் சதித் திட்டத்தில் மும்பையில் உள்ள வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.