காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது; அவரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் - திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று கும்பகோணத்தில் நடைபெறுகிற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஆகஸ்ட் 17-ல் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. எங்கு நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயத்தைத் தடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் அதை உடனடியாக முதலமைச்சர் ஏற்று அந்த முயற்சியைக் கைவிட்டு உள்ளார்.

தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. ஒவ்வொரு துறை சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது என்ற கேள்வியைக் கேட்கிறீர்கள்.

வெள்ளை அறிக்கை என்பது கடந்த கால ஆட்சி நிர்வாகத்தில் எவ்வாறு நிதி நிலைமை இருந்தது என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பதுதான். அதனை, இந்த அரசு வெளிப்படையாக அறிவிப்பது ஜனநாயகத்தின் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதை உணர்ந்து அரசு செயல்படுவதாக நினைக்கிறேன். நாங்கள் 35 வருடமாக தமிழ்த்தேசியம் பற்றி பேசி வருகிறோம்.

எங்களின் 5 முதன்மை முழக்கங்களில் ஒன்று, தமிழ்த்தேசியம், சாதி ஒழிப்பு, பாட்டாளி மக்கள் விடுதலை, மகளிர் விடுதலை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பனதாம். ஏராளமான தமிழ்த்தேசிய கருத்தரங்களை, மாநாடுகளை நடத்தி உள்ளோம். அடுத்த பாய்ச்சலாகத்தான் தமிழ்த்தேசிய மாநாடு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் முதல்வரின் நம்பிக்கைகுறியவர். அந்தப் பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல. ஆகவே, அந்தப் பொறுப்பை முதலமைச்சர் தனக்கு நம்பிக்கை கூறிய ஒருவருக்கு வழங்கி உள்ளார்.

அது, உட்கட்சி விவகாரம். அரசு பதவி இல்லை. அதை முடிவெடுக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கு உள்ளது. இந்த அரசு பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவோம் என்று அறிவித்து, படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். முற்றாக மது, போதை ஒழிக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் உள்ள ஒரு பிரச்னை. எல்லா மாநிலத்திலும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள் மது போன்ற அனைத்தும் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது கவலை அளிக்கிறது. மதுவிலக்கு என்பது மாநில அரசின் அதிகாரத்தில் இருந்தாலும் கூட தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை எடுக்கப்பட வேண்டும். காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது.

thirumavalavan

அவருடைய கொள்கைகளை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். தேர்தலுக்கு முன்பாக தி.மு.க தலைமையிலான கூட்டணியை உடைக்க பலர் முயற்சி செய்தார்கள். என்னை வைத்தும் அந்த முயற்சி நடந்தது. ஆனால், நான் அதற்கு உடன்படவில்லை.

தேர்தலுக்கு பின்பு தி.மு.க கூட்டணியைப் பாதுகாக்கும் வலிமை எனக்கு கிடையாது. ம.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை.

ம.தி.மு.க வேட்பாளர்களைக் கட்டாயப்படுத்தித்தான் உதயசூரியன் சின்னத்தில் தி.மு.க போட்டியிட வைத்ததாக வைகோ கூறியுள்ளது குறித்து தி.மு.க-விடமும், ம.தி.மு.க-விடமும் தான் கேட்க வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.