பாக்யராஜ் : `கதாசிரியர் எழுத்தாளர்களின் வசனங்களுக்கும் காப்பிரைட் கிடைக்க போராடினார்- யார்கண்ணன்

திரைக்கதை பிதாமகர் என்றழைக்கப்படும் கே.பாக்யராஜ், மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 73. இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பத்திரிகை அதிபர், பத்திரிகையாசிரியர், எழுத்தாளர் என்ற பன்முகத்துக்கு சொந்தக்காரரான பாக்யராஜின் மறைவு, திரையுலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவரது மறைவு குறித்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் துணை தலைவரான யார் கண்ணனிடம் பேசினோம். நெகிழ்ச்சியுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

எம்.ஜி.ஆர் - பாக்யராஜ்

``இன்னிக்கு காலையில தகவல் கேள்விப்பட்டதும் ரொம்பவே பேரதிர்ச்சியாகிடுச்சு. என் குடும்பத்துல ஒருத்தரோட இழப்பாக உணர்றேன். நான் அவர்கிட்ட உதவி இயக்குநராக இருந்ததில்லை. படங்கள்ல நடிச்சதும் கிடையாது. நான் இயக்குநர் மகேந்திரன் சாரோட உதவியாளர். ஆனாலும் பாக்யராஜ் சாருக்கும் எனக்குமான நட்பு எழுத்தாளர்கள் சங்கத்தின் மூலமாக வந்தது. நாலு நாளுக்கு முன்னாடி கூட தேர்தல் வேலைகள் தொடர்பாக அவர்கிட்ட பேசினேன். தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடக்கவுள்ளது. எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆகவும் மறைந்திருக்கிறார்.

கே.பாக்யராஜ்

அவருடைய விலைமதிப்பற்ற நேரங்களை எல்லாம் சங்கத்துக்காக செலவிட்டார். எழுத்தாளர்களின் அடையாளமாகத்தான் அவர் இருந்தார். எழுத்தாளர்களுக்கான உரிமைகளை வாங்கிக் கொடுக்கணும் என்பதில் உறுதியா இருந்தார். ஒரு பாடல் போட்டால், எப்படி காப்பி ரைட்டில் பாடலாசிரியருக்கு ஒரு தொகை, இசையமைப்பாளர்களுக்கு ஒரு தொகை எனத் தேடி வருகிறதோ அந்த மாதிரி ஒரு வசனம் போட்டால், கதாசிரியர்களுக்கு தொகை கிடைக்கணும் என்கிற எண்ணம் அவர்கிட்ட மேலோங்கியிருந்தது. இதுக்காக அவர் சமீபத்துல ஹைதராபாத்துக்குக்கூட போயிட்டு வந்தார். அதைப் போல இப்ப படங்கள் பான் இண்டியா படங்களாக ஆகுறதால, கதாசிரியர், எழுத்தாளர்களுக்கு வருமானம் கிடைக்காமல் போகுது, அதனால தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் போடும் காலகட்டத்துலேயே கதாசிரியர், எழுத்தாளர்களுக்கு ஒரு சதவிகிதம் வருமானம் கிடைக்கணும் என்பதிலும் ரொம்பவே போராடினார்.

எம்.ஜி.ஆர் - பாக்யராஜ்
எம்.ஜி.ஆர் - பாக்யராஜ்

முடிவு எடுப்பதில் நிதானம் காட்டுவார். செயற்குழு கூட்டங்கள்லகூட எல்லோரையும் பேச வச்சு, பொறுமையாக எல்லாத்தையும் கேட்டுக்குவார். யாரையும் டாமினேட் பண்ணமாட்டார். கதை திருட்டு பிரச்னை புகார் வந்தால், உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தியேட்டர்கள்ல அந்த படத்தை பார்க்க வைப்பார். எங்கள் கருத்துக்களை சீலிடப்பட்ட, முத்திரையிடப்பட்ட கவர்கள்ல வாங்கிக்குவார். கதை புகார்கள்ல பல ஏழை எழுத்தாளர்களுக்கு, உதவி இயக்குநர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்திருக்கார். அதைப் போல, செலிபிரிட்டிகள் மீது குற்றச்சாட்டுகள் வரும் போது, அவங்களுக்கு அவதூறு நேராத வண்ணம் கவனமாக கையாள்வார். ஒரு மனிதாபிமானமும், முன்னெச்சரிக்கை உணர்வும் உண்டு.

பாக்யராஜ் - பாரதிராஜா
பாக்யராஜ் - பாரதிராஜா

மகேந்திரன் சார்கிட்ட நான் உதவி இயக்குநராக இருந்த போது எடிட்டர் லெனின் சாருடன் சேர்ந்து அகராதினு ஒரு சிற்றிதழை நடத்தினோம். அதில் சினிமா பிரபலங்களையும் எழுத வச்சோம். அதில் பாக்யராஜ் சார் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதை பிரசுரம் ஆகுறதுக்கு முன்னர் என்னை ஏவி.எம்.ஸ்டுடியோவுல சந்திச்சவர், கவிதை வந்திடுச்சா?னு முக மலர்ச்சியோடு விசாரிச்சார். அவர் அன்னிக்கு இருந்த புகழ் உச்சத்துலேயும், ஒரு தனிச்சுற்றிதழில் வெளியாகும் கவிதையை கூட ஆவலாக கேட்டறிந்தார். அதனால தான் அவரால பாக்யா என்கிற பத்திரிகையை ஆரம்பிக்க முடிந்தது. பல பிரபலங்களை உருவாக்கினார். பலரும் பட்டைத்தீட்டப்பட்டார்கள். அதைப் போல, தனது உதவி இயக்குநர்களையும் நடிகராக ஆக்கினார்.

யார் கண்ணன்

இன்னிக்கு உலக திரைப்பட வரலாற்று சான்றுகளை எடுத்துக்கிட்டாலும் சரி, இந்திய திரைப்பட வரலாறுகளிலும் சரி, தமிழ்த் திரையுலகம், தென்னக திரையுலகம் எடுத்தாலும் அவருக்கான இடம் ஈடுசெய்ய முடியாத இடம். அவர்நிகர் வேறு யாருமே கிடையாது. என்னோட நட்பு வட்டத்துல ஒரு தவிர்க்க முடியாத பந்தம் அவர். அவரது இழப்பு நிச்சயம் ஈடு செய்யமுடியாத இழப்பு. அவருடைய தலைமையில் நான் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவராக இருந்தது பொற்காலம் தான். அவருக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி. என்றார் கண்கள் கலங்க!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.