பெ.சண்முகம்: போர் யானை சும்மா இருக்காது - முரசொலிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் குறித்து முரசொலியில் எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்

இது அநாகரிக்கத்தின் உச்சம். ஏழை,எளிய மக்களுக்காக அர்ப்பணித்த பெ.சண்முகம் காவிரி கரையோரம் பிறந்து அந்தச் சிவப்புத் துண்டைத் தோளில் ஏந்தி களமாடியதையும், போராடியதையும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது.

அப்படிப்பட்ட மாமனிதரை முரசொலியில் என்ன என்னவோ எழுதி வைத்திருக்கிறார்கள். டானிக் குடித்து வளர்ந்தவர்... அவர்களைப் போல (திமுகவினர்) டாஸ்மாக் டானிக் குடித்து வளர்ந்தவரா? இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்கிறார்கள்.

அரசியல் என்பது நாகரிகத்தின் எல்லையில் இருக்க வேண்டும். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதை வண்மையாகக் கண்டித்து இருப்பார். நாகரிக அரசியலை நோக்கி திரும்ப வேண்டும். சி.வி.சண்முகமும், பெ.சண்முகமும் ஒன்று என்று முரசொலி எழுதுகிறது என்றால் எவ்வளவு பெரிய வன்மம்.

சி.வி.சண்முகம் அவருடைய அரசியலில் அதிமுகவில் களமாடி வருகிறார். அவரைச் சிறுமைப்படுத்த பயன்படுத்துகிறீர்கள் என்றால் அவர் குறித்து உங்கள் (முரசொலி) மதிப்பீடு என்ன?

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

சி.வி.சண்முகத்தோடு பெ.சண்முகத்தை ஒப்பீடு செய்வதால் பெ.சண்முகத்தின் மதிப்பீடு என்ன? தவெக சார்பில் இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவப்புத் துண்டை இதுபோல சிறுமைப்படுத்தினால் இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது.

மூத்த கம்யூனிஸ்ட் தோழரை ஒன்று, இரண்டு, மூன்று என சிந்துபாத் கதை போல வன்மத்தைக் கக்குவது முறையா? அனைவரும் நாகரிகத்தின் எல்லையைக் கருதி அதோடு நிற்க வேண்டியது கடமை" என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.