16 பாஸ்போர்ட்டுகள், 245 நாடுகள்.! தற்கொலை விளிம்பிலிருந்து மொத்த உலகை சுற்றி வந்த இந்திய இசை கலைஞர்!
ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம்16 இந்திய பாஸ்போர்ட்டுகள். ஒவ்வொன்றிலும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குத்தப்பட்ட முத்திரைகள், விசாக்கள்.
அண்டார்டிகா உட்பட 245 நாடுகளுக்கும் பயணித்து, ஒரு மனிதன் சாதிக்க முடியுமா என்று மலைக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த இசைக்கலைஞர் பென்னி பிரசாத்.
வெறும் 6 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 22 நாட்களில் இந்த உலகை சுற்றி வந்து, மிகக் குறைந்த காலத்தில் எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரது இந்த அசாத்திய பயணத்தின் காணொலி ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் MTP - Most Traveled People என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தனது 16 பாஸ்போர்ட்டுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் காட்டுகிறார் பென்னி. காலத்தால் மஞ்சள் நிறமான பக்கங்கள், இடம் மிச்சமின்றி நிரம்பி வழியும் முத்திரைகள் என அந்த பாஸ்போர்ட்டுகளே அவரது பயணத்தின் தீவிரத்திற்கு சாட்சியாக நிற்கின்றன. "நான் இந்தியாவிலிருந்து வருகிறேன், உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் மிகக் குறைந்த காலத்தில் பயணம் செய்துள்ளேன்... 245 நாடுகள், வெறும் ஆறே ஆண்டுகளில்," என்று அந்த காணொலியில் அவர் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
சாதாரண சுற்றுலாப் பயணிகளைப் போல விமான டிக்கெட் முன்பதிவு செய்வதோடு முடிந்துவிடுவதில்லை பென்னியின் பயணங்கள். ஒவ்வொரு நாட்டுக்குமான விசா கட்டுப்பாடுகள், விண்ணப்பங்கள், ஆவணங்கள் என இதன் பின்னணியில் இருக்கும் உழைப்பு மலைக்க வைக்கிறது. இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள், "கடவுளே, இத்தனை ஆவண வேலைகளை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!" என்று ஒருவர் குறிப்பிடுகிறார். "இந்தியாவிலிருந்து ஒரு பயண லெஜன்ட், உங்களுக்கு என் மரியாதை!" என மற்றொருவர் தனது வியப்பைப் பகிர்ந்துள்ளார். விசா கட்டுப்பாடுகள் இல்லாத சூழலில்கூட இது மிகக் கடினமான சாதனை எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால், இந்த உலகளாவிய பயணத்தின் பின்னணி என்ன? யார் இந்த பென்னி பிரசாத்?
ஆகஸ்ட் 6, 1975-ல் பெங்களூருவில் பிறந்த பென்னி, தன் குடும்பத்தின் முதல் தலைமுறை குழந்தை. அவர் மீது பெரும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் வைக்கப்பட்டன. ஆனால், அவரது தொடக்கம் அத்தனை சிறப்பாக அமையவில்லை. தீவிர ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக எடுத்துக்கொண்ட ஸ்டீராய்டு மருந்துகளால் முடக்கு வாதம், 60% நுரையீரல் பாதிப்பு, செயலிழந்த நோயெதிர்ப்பு அமைப்பு என எண்ணற்ற உடல்நலப் போராட்டங்களை எதிர்கொண்டார். இன்றும் அந்த பாதிப்புகள் அவரைத் தொடர்கின்றன.
படிப்பு வரவில்லை, அறிவியலும் கணிதமும் எட்டாக்கனியாகவே இருந்தன. பெற்றோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாததால் மன அழுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கினார். தனது 16 வயதில், வாழ்க்கையின் விளிம்புக்கே சென்று தற்கொலைக்கும் முயன்றார். விரக்தியின் உச்சத்தில் இருந்த அந்த தருணத்தில்தான், இசை அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக நுழைந்தது. இசையின் மூலமாக தனக்கான புதிய பாதையைக் கண்டுகொண்டார். இன்று, அதே இசையின் வழியாக, ஒவ்வொரு ஆண்டும் 40 முதல் 50 நாடுகளுக்குப் பயணம் செய்து, கடவுள் மீதான நம்பிக்கையை ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொண்டு சேர்க்கிறார்.

இதுகுறித்து பென்னி பிரசாத் கூறும்போது, "என்னையே பயனுள்ளவனாக மாற்ற முடிந்தால், இந்த உலகில் யாரை வேண்டுமானாலும் மாற்ற முடியும். என் கனவுகள் நனவாகும்போது, உங்கள் கனவுகளும் நனவாகும். என் பாவங்களும் அவமானங்களும் சர்வவல்லமையுள்ள கடவுளால் மாற்றப்பட்டன. நம்பிக்கையற்றவர்களுக்கு சொல்கிறேன், வாழ்க்கை இன்றுடன் முடிந்துவிடுவதில்லை. நான் அன்று என் வாழ்க்கையை முடிக்காமல், அவமானங்களையும் தோல்விகளையும் கடந்து வாழ முடிவெடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. அதனால்தான் இன்று நான் இந்த உலகிற்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
View this post on Instagram
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


