மாவட்ட நிர்வாகம் டு காலநிலை மாற்றம்! முதல்வர் விஜய் தலைமையில் 2 நாள் IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு
முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலுமிருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
ஜூன் 29 காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதில்,
* சட்டம்-ஒழுங்கு,
* பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு,
* பொது சுகாதாரம்,
* போதையில்லா தமிழ்நாடு திட்டம்,
* பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் நலன்,
* அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது,
* முதியோர் நலன்,
* சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது,
* அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்,
* புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் தனியாக ஆலோசனை நடத்துகிறார். இதில், 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் “வெற்றி தமிழகம்” தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஜூன் 30 அன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து IFS அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில்,
* பசுமை தமிழ்நாடு திட்டம்,
* வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு,
* வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது,
* மனித–விலங்கு மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இதற்கான முன்னேற்பாடாக, ஜூன் 28 காலை 10.30 மணிக்கு, சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து முன்ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


