சோதனையின்போது வீட்டிலிருந்து ரூ. 40 லட்சம் எடுத்தார்களா? - எ.வ.வேலு சொல்வது என்ன?
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி 3.2 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார்.
அதன் பேரில் சமீபத்தில் எ.வ. வேலு மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த 9 அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் சதி, மோசடி, அரசுப் பணம் கையாடல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று (ஜூன்.25) காலை முதல் சென்னை திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை மற்றும் திருப்பூர் என 20 இடங்களில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்பு உடைய அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எ.வ. வேலு, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். முதலமைச்சரிடம் சட்டப்பேரவையில் கேள்வி கேட்டதால் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையால் நாங்கள் பயந்துவிடுவோம் என தவெக அரசு நினைக்கிறது. நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம். எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான். நான் நிரபராதி என்பதைக் கட்டாயம் நிரூபிப்பேன்.

மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயமில்லை. நான் பரிசுத்தமானவன், எந்தத் தவறும் செய்யாதவன். 40 லட்சம் பறிமுதல் என்பது வடிகட்டிய பொய். என்னுடைய வீடு உள்ளிட்ட எங்கேயும் ஒரு பைசா பணம் கூட பறிமுதல் செய்யப்படவில்லை.
என் அலுவலகத்தில் உள்ள கணினிகளைப் பறிமுதல் செய்கிறோம் என்றார்கள். நாங்களே மனமுவந்து கையெழுத்துப்போட்டுக் கொடுத்தோம்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


