Doctor Vikatan: சத்தமாகப் பேசும் பிரச்னை... அடுத்தவருக்கு அசௌகர்யம்... தீர்வு உண்டா?
Doctor Vikatan: எனக்கு ஒரு விசித்திரமான பிரச்னை உள்ளது. நான் எப்போது, எங்கு பேசினாலும் மிகவும் சத்தமாகப் பேசுகிறேன். இது பெரும்பாலும் மற்றவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது.
நான் விழிப்பு உணர்வோடு மெதுவாகப் பேச முயற்சி செய்யும்போது கூட, சில நொடிகளிலேயே எனது குரல் மீண்டும் சத்தமாகி விடுகிறது. இது என்ன மாதிரியான பிரச்னை, இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி.
வழக்கமாக சுமார் 35-50 டெசிபல் சத்தத்தில் பேச வேண்டிய இடங்களில்கூட, சிலர் 70-80 டெசிபலில் மிக உரத்த குரலில் கத்திப் பேசுவதை நாம் பார்க்கலாம். இதன் பின்னணியில் நிறைய காரணங்கள் இருக்கக்கூடும். உங்களுக்கு எந்தக் காரணத்தால் இந்தப் பாதிப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால், அதற்கான தீர்வைத் தேடுவது எளிதாகும்.
முதல் விஷயம் இயர்போன்ஸ் (Earphones) அல்லது ஏர்பாட்ஸ் (Airpods) பயன்பாடு. இப்போதெல்லாம் பலரும் காதுகளில் இயர்போனையோ, ஏர்பாட்ஸையோ மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே மற்றவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது கவனம் வேறொன்றில் இருப்பதால், அந்தச் சூழலில் மற்றவர்களுடன் பேசும்போது தங்களையும் அறியாமல் உரத்த குரலில் பேசுவார்கள்.
உங்களுக்குக் கேட்கும் திறன் குறைபாடு (Hearing Loss) ஏதேனும் உள்ளதா என்பதையும் நீங்கள் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக, கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள், தங்களுக்குச் சரியாகக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தானாகவே உரத்த குரலில் பேச முயற்சி செய்வார்கள்.
எனவே, ஒருவர் தொடர்ந்து சத்தமாகப் பேசி வருகிறார் எனில், அவருக்கு அனைத்து அலைவரிசைகளிலும் (Frequencies) கேட்கும் திறன் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யும் வகையில் ஆடியாலஜிக்கல் பரிசோதனை (Audiological Evaluation) செய்ய வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், அதற்குரிய தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

சிலருக்கு இயல்பாகவே சத்தமாகப் பேசுவது ஒரு பழக்கமாக இருப்பதையும் பார்க்கலாம். அதேபோல குறிப்பிட்ட சில பணிகளைச் செய்பவர்களுக்கும் இந்தப் பழக்கம் ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, பேச்சாளர்கள், பாடகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோர் தங்கள் குரலை எப்போதும் உரக்கப் பயன்படுத்திப் பழக்கப்பட்டவர்கள்.
இந்தத் தொடர் பழக்கத்தின் காரணமாக (Habituation), அவர்கள் சாதாரணமாகப் பேசும்போதும் அவர்களின் குரல் உரத்த தொனியிலேயே வெளிப்படலாம்.
நரம்பியல் சார்ந்த (Neurological) பிற காரணங்களால் சத்தமாகப் பேசுவது என்பது மிகவும் அரிதான ஒன்று என்பதால், சத்தமாகப் பேசுபவர்களுக்குக் கேட்கும் திறன் குறைபாடு (Hard of hearing) உள்ளதா என்பதை முதன்மையாகக் கவனித்து அதைக் கண்டறிவதுதான் மிகவும் அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

