ஆடி ஞாயிறு சிறப்புகள்

ஆடி மாதத்தில் சிறப்பு மிகுந்த நாட்களாக கருதப்படுவது ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் மற்றும் ஆடி ஞாயிறு. அப்படிப்பட்ட சிறப்பு நிறைந்த ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியும் சேர்ந்து வருகிறது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதம். அம்மனை வழிபடுவதற்குரிய சிறந்த மாதம். அதிலும் ஆடி ஞாயிற்றுக்கிழமை என்பது பல அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் நடக்கும். அன்றைய தினம் பௌர்ணமியும் சேர்ந்து வரும்பொழுது அதற்கு இன்னும் பல அற்புதமான பலன்கள் கிடைக்கும். அந்த ஆடி பௌர்ணமி அன்று நாம் எந்தெந்த தெய்வங்களை எப்படி எல்லாம் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி ஞாயிறு சிறப்புகள்

முதலில் ஆடி மாதத்திற்கு விசேஷமாக கருதக்கூடிய அம்மனை அன்றைய தினம் எப்படி வழிபடுவது என்பதை பார்ப்போம். வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அம்மன் படத்தை சுத்தம் செய்து அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வேப்பிலை வாசனை மிகுந்த மலர்கள் போன்றவற்றை அம்மனுக்கு சாற்றி ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேதியமாக அம்மனுக்கு படைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து குடும்பத்தாருடன் சேர்ந்து “ஓம் சக்தி” என்னும் மந்திரத்தை 308 முறை சத்தமாக உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதன் மூலம் அம்மன் நம் வீடு தேடி வந்து நாம் வேண்டிய அனைத்தையும் வாரி வழங்குவார். அன்றைய தினம் நாம் வழிபட வேண்டிய மற்றும் ஒரு தெய்வம் சத்ய நாராயணர். பொதுவாக பௌர்ணமி தினங்களில் சத்திய நாராயண பூஜை செய்வது என்பதும் விசேஷகரமான ஒன்றாக கருதப்படுகிறது.

அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது சத்யநாராயண பூஜைக்கு உகந்த ஒரு தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் சத்திய நாராயண பூஜை செய்யும் வழக்கம் இருப்பவர்கள் அந்த பூஜையை மேற்கொள்ளலாம். அப்படி இயலாதவர்கள் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்திருக்க கூடிய ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் அவர்களின் அருளை பெற முடியும்.

பொதுவாக பௌர்ணமி தினம் என்பது எப்படி பெண் தெய்வங்களுக்கு உகந்த தினமோ அதே போல் சிவபெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. பலரும் பௌர்ணமி இரவு கிரிவலம் செல்லும் வழக்கம் வைத்திருப்பார்கள் அல்லது சிவாலயத்திற்கு சென்ற வழிபடும் வழக்கமும் வைத்திருப்பார்கள். அன்றைய தினம் மாலை நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு அல்லது சிலைக்கு பாலால் அபிஷேகம் செய்து வில்வ இலைகளை சாற்றி ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து “ஓம் சிவாய நம” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

இப்படி உச்சரிப்பதன் மூலம் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று வில்வ இலைகளை கொடுத்து வழிபாடு செய்யும் பொழுது அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

இதே போல் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் குழந்தைகளின் கையால் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க சொல்ல வேண்டும். இப்படி உச்சரிப்பதன் மூலம் அவர்களுடைய பிற்கால வாழ்க்கையில் நல்ல கல்வி அறிவு பெற்று சிறந்த வாழ்க்கையை வாழ்வார்கள்.

மந்திரம்:

ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே: பௌர்ணமி தினத்தில் வாராகி அம்மனை வழிபடும் முறை
வீட்டிலேயே செய்யக்கூடிய இத்தனை வழிபாட்டு முறைகளையும் பின்பற்றினாலும் பின்பற்றலாம் அல்லது இதில் எது உங்களுக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்களோ அந்த வழிபாட்டை பின்பற்றி வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் நல்ல பலன்களை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

The post ஆடி ஞாயிறு சிறப்புகள் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.