Gautam Gambhir: 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவு; என் ஒரே குறிக்கோள் - புதிய பயிற்சியாளர் கம்பீர்

2021 டிசம்பர் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார்.

டிராவிட் தொடர்ந்து இப்பதவியில் நீடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் ஐ.பி.எல் நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே புதிய பயிற்சியாளர்களுக்கான தேர்வை பி.சி.சி.ஐ தொடங்கியது. தற்போது இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவருக்குப் பிறகு இப்பொறுப்பிற்கு யாரைத் தேர்வு செய்வது என பி.சி.சி.ஐ கடந்த சில மாதங்களாக மும்முரம் காட்டி வந்தது. இதில் இந்தியாவின் பல முன்னாள் வீரர்களின் பெயர்கள் அடிபட்டன. இறுதியாக கவுதம் கம்பீரை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல் கசிந்து வந்தன.

ஜெய் ஷா, கெளதம் கம்பீர்

கடந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு 2024 ஐ.பி.எல் கோப்பையை வென்று காட்டினார் கவுதம் கம்பீர். இதையடுத்து கெளதம் கவுதம் கம்பீர்தான் இந்திய அணியை வழிநடத்துவதற்குச் சரியான பயிற்சியாளர் எனப் பேச்சுகள் அடிபட்டன. இந்நிலையில் எதிர்பார்த்தபடியே நேற்று கவுதம் கம்பீரை இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது பி.சி.சி.ஐ.

இதையடுத்து கவுதம் கம்பீருக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கவுதம் கம்பீர், "இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்குச் சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும்.

India is my identity and serving my country has been the greatest privilege of my life. I’m honoured to be back, albeit wearing a different hat. But my goal is the same as it has always been, to make every Indian proud. The men in blue shoulder the dreams of 1.4 billion Indians… pic.twitter.com/N5YyyrhXAI

— Gautam Gambhir (@GautamGambhir) July 9, 2024

மதிப்புமிக்க வேறொரு பொறுப்புடன் மீண்டும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியதில் பெருமை கொள்கிறேன். முன்பு வீரராக இருந்த நான், இப்போது பயிற்சியாளராகச் செயல்படப் போகிறேன். ஆனால், எனது குறிக்கோள் ஒன்றே. ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்க வேண்டும் என்பதே அந்த குறிக்கோள். 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளைத் தோள்களில் சுமக்கும் வீரர்களுடன் இணைந்து, அந்தக் கனவுகளை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.