Darshan: சிறை உணவு வேண்டாம் வீட்டு உணவுதான் வேண்டும்! ஏனென்றால்... - நடிகர் தர்ஷன் கொடுத்த மனு
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் வழங்கப்படும் உணவு தனக்குச் செரிமானம் ஆவதில்லை என்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்குமாறு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருக்கிறார்.
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகரான தர்ஷன், தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கடாவுக்குத் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்த தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்ஸர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறையில் தனக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்கச் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார் தர்ஷன்.
"சிறையில் வழங்கப்படும் உணவு எனக்குச் செரிமானம் ஆவதில்லை. அந்த உணவைத் தொடர்ந்து சாப்பிட முடியாததால் என்னுடைய உடல் எடை குறைந்துவிட்டது. மேலும் எனக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் எனக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்கச் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமின்றி ஆடைகள், படுக்கை மற்றும் புத்தகங்கள் போன்றவற்றையும் வழங்கச் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.