குறைந்துகொண்டே வரும் செக்ஸ் ஃபீலிங்... சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்..! |காமத்துக்கு மரியாதை - 176

ஒவ்வொரு மனிதரும் தனித்தனி நபர். பிரச்னைகளும் அப்படித்தான், நபருக்கு நபர் மாறுபடும். ஆனால், காமம் தொடர்பான பிரச்னைகளில் மட்டும் ஒருசில பிரச்னைகள் பலருக்கும் ஒரே மாதிரி இருக்கும். அவற்றில் ஒன்றான காம உணர்வில் தொய்வு ஏற்பட்டு சலிப்புடன் வாழ்ந்து வருகிற தம்பதிகளுக்கு சில தீர்வுகள் வழங்க, மருத்துவ உளவியலாளர் ராஜவர்மனிடம் பேசினோம்.

’’காமத்தில் தொய்வு ஏன் ஏற்படுகிறது என்பதைச் சொல்வதற்கு முன்னால், உங்கள் அனைவருக்கும் ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன். இந்தத் தொய்வு திருமணமான பல வருடங்கள் கழித்துதான் வருமென்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது திருமணமான சில மாதங்களில் கூட வருமென்பதுதான் உண்மை.

couple love

திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு பலமுறை உறவு வைத்துக்கொள்வார்கள். அதையும் நீண்ட நேரம் வைத்துக்கொள்வார்கள். இதை திருமணமான அனைவரும் அறிவார்கள். சில மாதங்களில் இது மெதுவாக குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு சில வருடங்களில் குறைய ஆரம்பிக்கும். எங்கேயோ ஒரு சிலருக்கு சில பல வாரங்களில்கூட குறையலாம். இந்தத் தொய்வைச் சரி செய்ய முடியும். அதுவும் தம்பதிக்கு தம்பதி வேறுபடும். ஆனால், கண்டிப்பாக சரி செய்ய முடியும்.

எல்லா தம்பதியரின் வாழ்க்கையையும் படுக்கையறைக்கு உள்ளே, படுக்கையறைக்கு வெளியே என இரண்டாகப் பிரிக்கலாம். படுக்கையறைக்குள்ளே நிகழ்கிற தொய்வற்ற அந்நியோன்யம்தான் படுக்கையறைக்கு வெளியேயான வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது’’ என்றவர் தொடர்ந்தார்.

’’காமத்தின் ஆரம்பத்தில் கணவனுக்கும் சரி, மனைவிக்கும் சரி, தேடலும் மோகமும் அதிகமாக இருக்கும். அது தொய்வடையாமல் இருக்க, இடத்தையும் நிலைகளையும் மாற்றிக்கொண்டே இருங்கள். ஒருநாள் படுக்கைக்கு மேலே என்றால், மறுநாள் சில்லிடும் தரையில் உங்கள் உறவு நிகழலாம்.

couple love

அடுத்து கர்ப்ப காலம். இயல்பாகவோ அல்லது மருத்துவ காரணங்களாலோ இந்தக் காலகட்டத்தில் காமம் தொய்வடைந்துதான் இருக்கும்.

அடுத்தகட்டம் குழந்தை பிறந்த பிறகு... உடல் பலவீனம், செக்ஸ்தானே தன்னுடைய இவ்வளவு பலவீனத்துக்கும் காரணமென்கிற எரிச்சலில் பெண்ணின் காம உணர்வு தொய்வடைய ஆரம்பிக்கும். ஆணுக்கோ, இது வேறு மாதிரி தொய்வை ஏற்படுத்தும். எப்படித் தெரியுமா? குழந்தை வளர்ப்பில் விருப்பத்துடன் ஈடுபடுகிற அப்பாக்களில் சிலருக்கு காமத்தில் ஈடுபாடு அதிகரிக்க ஆரம்பிக்கும். சிலருக்கோ குறைய ஆரம்பிக்கும். இது ஆய்வுகள் சொல்கிற முடிவு. குழந்தை வளர்ப்பில் ஈடுபடும்போதும் காதல் செய்யலாம். காம உணர்வில் தொய்வை உணர்பவர்கள் அடிக்கடி அணைப்பு, முத்தப் பரிமாற்றம், மனைவியின் உடலை வருத்தாத உறவு என இருக்கலாம்.

மருத்துவ உளவியலாளர் ராஜவர்மன்

சில தம்பதியர், தங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்டிருப்பதை இருவருமே உணர்ந்திருப்பார்கள். ஆனால், அதை சரி செய்ய யார் முதலில் நெருங்குவது என்று தவித்துக்கொண்டிருப்பார்கள். உங்கள் இல்லறத்தின் இனிமையைக் காப்பாற்ற யார் வேண்டுமானாலும் இதைத் தொடங்கலாம். அதற்கு நீங்கள் இருவருமே ஒரே படுக்கையில் உறங்க வேண்டும், அவ்வளவுதான். கூடவே, கணவனும் மனைவியும் தனிமை கிடைக்கும்போது தாங்கள் ஏற்கெனவே அனுபவித்த காமம் குறித்து உரையாடலாம். காமம் அனுபவித்த பிறகு, இருவரும் பரஸ்பரம் உச்சக்கட்டம் அடைந்தோமா என்பதை பற்றியும் மெல்லிய குரலில் கேட்டுக்கொள்ளலாம். எல்லா தொய்வுகளும் சரியாகும்."

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.