NEET: அன்று தமிழ்நாடு மட்டும், இன்று நாடு முழுவதும் வெடித்த எதிர்ப்பு - நீட் தேர்வும் குளறுபடிகளும்!

`தரமான, தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கப்போகிறோம், அரசியல் தலையீடு, முறைகேடுகளில்லாத நேர்மையான மருத்துவத் தகுதித் தேர்வை நடத்தப்போகிறோம் எனக்கூறி மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தேர்வில் (NEET) தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகள் நடந்துவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியிருக்கும் 2024 நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் மோசடி, அறிவிக்கப்படாத கருணை மதிப்பெண், ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் அடுத்தடுத்து ஒரே மதிப்பெண், அதிகபட்சமாக 67 பேர் முழுமதிப்பெண் பெற்று முதலிடம் என அடுக்கடுக்கானப் புகார்கள் எழுந்து, விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. மேலும், மோசடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில அரசுகளும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

அனிதாவின் தற்கொலை| NEET

கடந்த 2016-ம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வினால் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி சுமார் 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இதனால், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் தலைமையிலான தமிழ்நாடு அரசும் தொடக்கம் முதலே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றன. மேலும், இரண்டுமுறை நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டினால் சில மாணவர்களுக்கு மருத்துக் கனவு நிறைவேறினாலும் பெரும்பாலான தமிழக மாணவர்களின் மருத்துக் கனவு நீட் தேர்வினால் சிதைக்கப்பட்டிருப்பதோடு, மருத்துவப் படிப்பில் சேர்ந்த மற்றும் சேர ஆர்வம் காட்டிவந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்திருக்கின்றன. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டத்துக்கொரு மருத்துவக் கல்லூரி என்ற ரீதியில் மிக அதிகமான அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தபோதும், அவையெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக அல்லாமல் வெளிமாநில மாணவர்களுக்கு தாரைவார்க்கப் படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 4,750 தேர்வு மையங்களில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். அப்போதே சில தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிந்திருப்பதாகவும், மறுதேர்வு நடத்தவேண்டும் எனவும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றத்துக்கும் கோடை விடுமுறை உண்டு என்பதால், விடுமுறைக்குப் பிறகு மனு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்தநிலையில், ஜூன் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், அதற்கு மாறாக பத்து நாட்களுக்கு முன்பே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அவசரமாக அறிவிக்கப்பட்டன. அப்போதே. தேர்தல் நடத்தும் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency-NTA) மீது பலருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, வெளியான நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

NEET

அதாவது, நீட் தேர்வு வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 67 மாணவர்கள் 720/720 முழு மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றிருக்கின்றனர். இதுவரை நடந்த கடந்தகால தேர்வுகளில் ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே முழு மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றிருக்கிறார்கள்; மேலும், முதலிடம் பெற்றவர்களில் பெரும்பாலான மாணவர்கள் முழுமையான மதிப்பெண் பெற்றதும் இல்லை. கடந்த முறை தேர்வுகளை விட இந்தத் தேர்வு மிகவும் கடினம் என்று மாணவர்கள் சொல்லும் நிலையில் எப்படி 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்கள் என்ற கேள்வி வலுவாக எழுந்திருக்கிறது. மேலும் அதில், 6 மாணவர்கள் ஹரியான மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல, வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டப்படும் ராஜஸ்தானில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பது மாணவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

Neet Exam

உச்சபட்சமாக, நெகடிவ் மார்க் கால்குலேஷன் படி, சாத்தியமே இல்லாத எண்களில் மதிப்பெண் பெற்றிருப்பதால் நிச்சயம் குளறுபடிகள் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள். அதாவது நீட் தேர்வுத் திட்டத்தின்படி, நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும்; அதுவே ஒரு கேள்விக்கு தவறாக விடை எழுதினால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். அப்படியானால், ஒரு தவறான விடைக்கு 4 மதிப்பெண் மற்றும் அதற்கான நெகட்டிவ் மார்க் 1 என மொத்தம் 5 மதிப்பெண் குறையும். ஒருவேளை கேள்விக்கு விடை தெரியாமல் விட்டுவிட்டால் 4 மதிப்பெண் குறையும். அப்படியென்றால், இரண்டாம் மதிப்பெண் 716 என்றும், மூன்றாவது மதிப்பெண் 715 என்றும்தான் இருக்க வேண்டும். ஆனால், தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற பலரின் மார்க் ஷீட் மதிப்பெண் 719, 718 என சம்மந்தமே இல்லாத எண்களில் இருக்கின்றன. அதேபோல, ஃபிஸிக்ஸ் வாலா போன்ற பிரபலமான நீட் கோச்சிங் சென்டர்களின் பயிற்சியாளர்கள், `நீட் தேர்வு எழுதி அதிமான மதிப்பெண் பெற்ற சில மாணவர்களின் விடைத்தாளை சர்பார்க்கும்போது, விடைத்தாளில் ஒரு மதிப்பெண்ணும், என்.டி.ஏ-வின் தேர்வு முடிவில் மாறுபட்ட மதிப்பெண்ணும் இருப்பதாக, அதாவது விடைத்தாளில் பெற்றிருப்பதைவிட அதிகமான மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது; இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்! எனக்கூறி #NEETfraud #NEET_paper_leak #neetscam2024 உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் தீயாய் பரவ, பல்வேறு மாநில அரசுகள், எதிர்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க மற்றும் சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சி நடத்திவரும் மகாராஷ்டிரா அரசாங்கம், `2024 நீட் தேர்வு முடிவுகள், மாணவர்களை வஞ்சிப்பதாகவும், அரசுப் பள்ளி மாணவர்கள் MBBS படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதாகவும் அமைந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. மேலும், ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இதுதவிர, ஜூனியர் டாக்டர்ஸ் நெட்வொர்க் அமைப்பு, ``நீட் நுழைவு தேர்வில், அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்வதற்காக, நடைபெற்ற தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

நீட் தேர்வு

இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை(NTA) இயக்குநர் சுபோத் குமார் சிங், ``தேர்வர்களால் சில பிரச்னைகள் எழுப்பப்பட்டிருக்கிறது. இது நாட்டிலேயே மிகப்பெரிய போட்டித் தேர்வு. 4,750 தேர்வு மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு ஒரே ஷிப்டில் தேர்வு நடைபெற்றது. சில மாணவர்கள் தங்களுக்கு குறைவான நேரம் கிடைத்தாக குற்றம்சாட்டினர். அதற்கு, உயர் நீதிமன்றத்தில் நாங்கள் பதிலளித்திருக்கிறோம். அதோடு, குறைதீர்ப்புக் குழு ஒன்றை அமைத்திருந்தோம். இந்தக் குழு சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களின் அறிக்கைகள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்தது. அதில், சில தேர்வு மையங்களில் நேரம் தவறியதைக் குழு கண்டறிந்தது. அதனால், மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க குழு முடிவு செய்தது. அதன்படி, சில மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக, சிலர் 718, 719 மதிப்பெண்கள் பெற்றனர். அனைத்தையும் ஆய்வுசெய்துதான் முடிவுகளை வெளியிட்டோம். 24 லட்சம் மாணவர்களில் 16,000 மாணவர்கள் மட்டுமே இந்தப் பிரச்னையை எதிர்கொண்டனர். 4,750 மையங்களில் இந்த பிரச்னை 6 மையங்களில் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. நாடு முழுவதும் இவ்வாறு நடக்கவில்லை. மேலும் வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை!" என விளக்கம் அளித்திருக்கிறார்.

NEET - தேசிய தேர்வு முகமை சுபோத் குமார் சிங்

இந்த முறைகேடு தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றிருப்பதும், 67 மாணவர்கள் 720 மதிப்பெண் பெற்றிருப்பதும் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது. மோடி பதவியேற்பதற்கு முன்பாகவே நீட் தேர்வு முறைகேடு 24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. பல மாணவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். ஆனால், வினாத்தாள் லீக் என்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``சமீபத்திய நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணைமதிப்பெண்கள் என்ற போர்வையில்நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளிவழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின்அதிகாரக் குவிப்பின் குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறோம். நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. சமூகநீதிக்கு எதிரானவை. நீட் எனும்பிணியை அழித்தொழிக்க கரம்கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் ராகுல் காந்தி

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமத்துக்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசியதேர்வு முகமையின் விளக்கம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல்வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் கூட சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட்தேர்வை ரத்து செய்து பழையபடி 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்தஆவனசெய்யும்படி புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்!" எனத் தெரிவித்திருக்கிறார். இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.ம.க, நா.த.க, அ.ம.மு.க., பா.ம.க உள்ளிட்டப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். முன்னதாக தமிழ்நாடு மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையாக எதிர்வினை ஆற்றிவந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.