அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.இதையடுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுவில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.கட்சி விதிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால் இன்று விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஓ பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முனி ஷங்கர், ஏற்கனவே வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் எண்ணிடப்பட்டாலும் இன்னும் பட்டியலிடப்படவில்லை. எனவே அனைத்து வழக்குகளையும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுங்கள், என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலிடப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.