`பேருந்துப் பயணத்தில் ஒரு கோவிட் நோயாளியால் 9 பேர் பாதிக்கப்படலாம் - சென்னை ஆய்வு சொல்வதென்ன?

கோவிட் தொற்றின்போது விதிக்கப்பட்ட முக்கியமான கட்டுப்பாடுகளில், சமூக இடைவெளியும் ஒன்று. தற்போது நம் நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம், முன்பு இருந்ததுபோல கட்டுப்பாடுகள் எதுவும் இதுவரை விதிக்கப்படவில்லை.

யாரேனும் ஒருவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகையில், சுற்றி இருப்பவர்கள் வெகு விரைவிலேயே நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இன்னும் கூட்ட நெரிசல் உள்ள பேருந்துகள் என்றால் சொல்லவே தேவையில்லை.

Social Distance

இந்நிலையில், `பாதியளவு ஆட்கள் நிறைந்துள்ள நகரப் பேருந்துகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயணிக்கையில், அவரால் 5 முதல் 9 நபர்கள் வரை பாதிக்கப்படலாம் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியைத் தளமாகக் கொண்ட ஐ.சி.எம்.ஆர் வெக்டர் கன்ட்ரோல் ரிசர்ச் சென்டரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதற்காக சென்னை தாம்பரம் முதல், பிராட்வே வரையிலான 21ஜி பேருந்து வழித்தடத்தை தேர்ந்தெடுத்தனர். 36.1 கி.மீ பாதையில், 40 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஐந்து பயணிகள் ஏறுவார்கள் அல்லது இறங்குவார்கள். பயணத்தின் எல்லா நேரத்திலும் பேருந்தில் 20 பயணிகள் இருப்பார்கள். ஆரம்பகட்டத்தில் பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாகக் கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொற்றுநோயியல் அளவீடான The reproductive number RO-வை பயன்படுத்தி, தொற்று பரவும் காலம், பாதிக்கப்படக்கூடிய நபர் மற்றும் தொற்று ஏற்படுத்துபவர் மற்றும் பாதிக்கப்படுபவருக்கு இடையே தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு போன்றவற்றை ஆராய்ந்தனர்.

கொரோனா பரிசோதனை

அதோடு பேருந்து பயணக் காலம், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் உள்ள நேரம், மொத்த தொற்று, மொத்த பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் சுவாசிக்கும் இடத்தின் அளவு ஆகியவற்றையும் மதிப்பிட்டனர். 

ஆய்வின் முடிவுகள்...

*பாதியளவு பயணிகள் நிறைந்துள்ள நகரப் பேருந்துகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயணிக்கையில், அவரால் 5 முதல் 9 நபர்கள் வரை பாதிக்கப்படலாம்.  

* கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக இருந்தாலோ அல்லது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ அல்லது பயணிகள் அதிக தூரம் வரை பயணித்தாலோ, இந்தத் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

* பேருந்து நிறுத்தங்களில் புதிதாக ஆட்கள் ஏறுகையில், தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

* தொற்று பாதித்தவரின் பயண காலப்பகுதியில், RO எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, பயணத்தின் முடிவில் RO 1.04 மதிப்பை எட்டுகிறது. 

* எனவே தொற்று அபாயத்தைக் குறைக்க மக்கள் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது நல்லது. 

இந்த ஆய்வு குறித்த செய்தி `Virus Disease என்ற இதழில் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.