இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது - இலங்கை அமைச்சர்

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என அமைச்சர் டக்ளஸ் யாழ்பாணத்தில் பேட்டியளித்தார்.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் வடமராட்சி வடக்கு மீனவர்களுடன் இலங்கை மீன் வளத்துறை அமைச்ச்ர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், மீனவர்களுடைய பிரச்னை குறித்தும் கேட்டு ஆராய்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தமிழக மீன்பிடி விசைப்படகுகள் பிடிக்கப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்தார்.

image

மேலும், தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து மத்திய அமைச்சர் முருகன், இந்திய வெளி விவகார அமைச்சர் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் அரசாங்க ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்பதை, இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தித்தான் இலங்கை மீனவர்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.

அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.