மியான்மரில் பிணை கைதிகளாக தவிக்கும் தமிழக வாலிபர்கள்

தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இங்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலையில் வெளிநாடு செல்ல முன் வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் செலவு அதிகமாகின்றது .எனவே தாய்லாந்து மலேசியா போன்ற அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர். பாஸ்போர்ட் ,விசாவுக்காக பணம் செலவு செய்து விட்டு அங்கு சென்றால் அவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. யாருக்கும் இங்கிருந்து புறப்படும் போது சொன்ன வேலை அங்கு வழங்கப்படுவதில்லை .மாறாக குற்ற செயல்களில் ஈடுபட வைத்து பணம் சம்பாதிக்கின்றனர்.


தமிழக இளைஞர்கள் போலீசில் சிக்கினாலும் அங்குள்ள குற்றவாளிகளுக்கு அது இழப்பு கிடையாது .இது போன்ற நிலை தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தாய்லாந்து சென்ற தமிழக வாலிபர்களுக்கு நடந்திருக்கிறது. அவர்கள் அங்கிருந்து துப்பாக்கி முனையில் மியான்மருக்கு பிணை கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டு உள்ளனர்.அங்கு குற்ற செல்களில் ஈடுபட அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளனர். அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்துள்ளனர். அப்படியும் சம்மதிக்கவில்லை என்றால் ₹5,000 அமெரிக்க டாலர் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று மிரட்டியுள்ளனர். அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். அவர்கள் தங்களை ஏமாற்றி வேலைக்கு எடுத்து இருக்கிறார்கள் என்றும், தங்களை போல் பலர் சிக்கி உள்ளனர் என்றும், தொடர்ந்து தினமும் பலர் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு விரைவில் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர்  வை.கோ எ.ம்பி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி காட்டுப்பகுதிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உள்ளிட்ட 300 இந்திய இன்ஜினியர்கள் கடத்திச் செல்லப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு சட்டவிரோத குற்றங்களை செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் அடி, உதை உடலில் மின்சாரம் பாய்ச்சுதல் முதலான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தாய்லாந்து நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் ஒரு குற்றமும் செய்யாத நிலையில் இவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.


அவர்களை மீட்டு தாயகத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





 


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.